அதிருப்தி எம்எல்ஏக்கள்
பாண்டியராஜன், அருண் பாண்டியன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட எட்டுப் பேர், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. கலையரசு, புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி ஆகிய பத்துப் பேரும் இன்று அ.தி.மு.கவில் இணைந்தனர்.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வெற்றிபெற்றது. தமிழக சட்டமன்றத்தில் முக்கிய எதிர்கட்சி ஆனது.
அடுத்த ஆண்டிலேயே அ.தி.மு.க. – தே.மு.தி.க. இடையே முட்டல் மோதல் ஏற்பட்டது.  இதையடுத்து சில மாதங்களில் தே.மு.தி.கவைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராய் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தன். தங்களது தொகுதி வளர்ச்சிக்காக முதல்வரை சந்தித்தாக கூறினார்கள்.
இவர்கள் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தனர். இருந்தபோதும், அவர்கள் தே.மு.தி.கவிலேயே நீடித்தனர். இவர்களை நீக்கினால் தனது எதிர்க்கட்சி தலைவர் பறிபோகும் என்பதால் நீக்காமல் இருந்தார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், இவர்கள் அனைவரும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, தமிழக சட்டப் பேரவையில் தே.மு.தி.கவின் எதிர்க்கட்சி அந்தஸ்து பறிபோனது.
அதேபோல, பா.ம.க., புதிய தமிழகம் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர்.   இவர்கள் பத்து பேரும் இன்று முறைப்படி அ.தி.மு.கவில் சேர்ந்துள்ளார்கள்.