ammasticker
திருப்பூர்:
இலவச திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் தலையில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி அழகு பார்த்த அதிமுகவினர்.
அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா சிமென்ட என்று தமிழக அரசின் அனைத்து செயல்பாடுகளும் அம்மா புராணமாகவே இருக்கிறது. உச்சகட்டமாக வெள்ள நிவாரணப் பொருட்களில் அம்மா ஸ்டிக்கரை ஓட்டியது தமிழக அரசுக்கு பெருத்த அவப்பெயரை ஏற்படுத்தியது. தற்போது உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற இலவச திருமண நிகழ்ச்சியில் ஏற்படுத்தப்பட்ட அவலம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேலும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவரது கட்சியினர் செயல்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனினும் தமிழகம் முழுவதும் ஏற்கனவே பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு ஐஸ் வைக்கவும், அவரை காக்கா பிடிக்கவும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் என அனைத்து தரப்பினரும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் அம்மா புராணத்தை பாடி வருகின்றனர்.
இந்த வரிசையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 68 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. இதில் மணமக்கள் தலையில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிய பேண்டு மாட்டிவிடப்பட்டது. அதோடு மணமக்கள் அணிந்திருந்த மாலைகள், கையில் வைத்திருந்த பூச்செண்டு ஆகியவற்றிலும் ஜெயலலிதா ஸ்டிக்கரை அதிமுக ஒட்டியிருந்தனர். பந்தலிலும் பிரம்மாண்ட ஜெயலலிதா பேனர் வைக்கப்பட்டிருந்தது.
திருமண நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை. எனினும் அவரது ஸ்டிக்கர், படம் ஆகியவை பல இடங்களில் ஆஜராகியிருந்தது. ஒரு வேலை இந்த நிகழ்ச்சி போட்டோ அல்லது வீடியோ ஜெயலலிதாவின் பார்வைக்கு சென்றால் தங்களது ஏதேனும் ஆதாயம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அதிமுகவினர் இவ்வாறு செயல்படுகின்றனர். இதனால் ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்துவது தான் மிச்சமாக இருக்கிறது.