family

கொழும்பு: இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது அவர் மற்றும் அவரது சகோதரர்கள் குடும்பத்தினர் முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்ரீசேனா பொறுப்புக்கு வந்த பிறகு இந்த விவகாரம் குறித்த விசாரணை துவங்கியது. அந்நாட்டு காவல் துறையின் நிதி மோசடி விசாரணை பிரிவு, ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட சில அமைப்புகள் இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஏராளமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

பொது சொத்துக்களை தன் வசமாக்கியது, அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியது, கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியது, ஊழல், மோசடி என பல்வேறு புகார்கள் ஆதாரத்துடன் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றில் அரசாங்கத்திற்கு சொந்தமான CSN தொலைக்காட்சி நிறுவனத்தில் மகிந்த புரிந்த 230 மில்லியன் அளவுக்கான ஊழல் குறித்த விசாரணை முழுதுமாக முடிந்திருக்கிறது.

மேலும், கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றும் விதத்தில் மகிந்த குடும்பத்தினர் சிங்கப்பூரில் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் மகிந்தராஜபக்ஷே மற்றும் அவரது சகோதரர்கள் முறைகேடான வகையில் சேர்த்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு நடந்த போர்க்குற்றத்தில் இருந்து “உள்நாட்டு விசாரணை” என்று ராஜபக்சே தப்பிவிட்டாலும், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.