shankar

“இந்தியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம்” என்று பாகுபலி விளம்பரப்படுத்தப்பட்டபோதே, “பிரம்மாண்ட இயக்குநர்” பட்டம், ஷங்கரிடம் இருந்து (பாகுபலி இயக்குநர்) ராஜமவுலிக்கு வந்துவிட்டது.

அப்போதே ஷங்கர் தரப்பில் அப்செட். “பாகுபலியை பீட் பண்ணுகிற மாதிரி எந்திரன் 2ம் பாகத்தை எடுக்கணும்” என்று  அப்போதே உறுதி எடுத்தார் ஷங்கர்.

ஆகவே புதிதாக எப்படி காட்சிகள் அமைக்கலாம் என்பதற்காக கிரியேட்டர்கள் குழுவை அமைத்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் ஷங்கருக்கும், ராஜமவுலிக்கும் மோதல் ஏற்பட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். அவர்கள் சொல்வது இதுதான்:

“ஏற்கெனவே தனது எந்திரன், ஐ படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளை அமைத்த ஸ்ரீனிவாஸ் மோகனே, எந்திரன் 2ம் பாகத்துக்கும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார்.

ஸ்ரீனிவாஸ் மோகன்
ஸ்ரீனிவாஸ் மோகன்

அவரோ இடையில் பாகுபலி படத்துக்கு கிராபிக்ஸ் காட்சிகளை  அமைத்துவிட்டு, அடுத்ததாக பாகுபலி 2ம் பாகத்துக்கும் கிராபிக்ஸ் காட்சி அமைக்க கமிட் ஆகிவிட்டார்.

ஆனாலும் விடாத ஷங்கர், “பாகுபலி 2ம் பாகத்துக்கு வேறு கிராபிக் டிசைனரை ஏற்பாடு செய்துகொடுத்துவிட்டு, எந்தரன் 2ம் பாகத்துக்கு வாருங்கள்” என்று வற்புறுத்த.. விஷயம், ராஜமவுலிக்கு தெரியவந்தது.

டென்ஷன் ஆன அவர், ஷங்கரை தொடர்புகொண்டு, “ஏற்கெனவே என் படத்தில் கமிட் ஆனவரை ஏன்  டார்ச்சர் செய்கிறீர்கள்…” என்று கேட்க.. வார்த்தை தடித்திருக்கிறது.

இந்த மோதல் குறித்து ரஜினிக்கு தகவல் செல்ல.. ராஜமவுலியை தொடர்புகொண்டு பேசியிருக்கறார். அவரது தன்மையான பேச்சைக் கேட்ட ராஜமவுலி ஸ்ரீனிவாஸ் மோகனை விட்டுக்கொடுக்க முடிவு செய்தார்” என்கிறார்கள் கோலிவுட் பட்சிகள்.

ஆனால், மோகன் ஸ்ரீனிவாஸ், “ஏற்கெனவே நான் எந்திரன் 2ம் பாகத்தில் கமிட் ஆகிவிட்டேன். அதனால்தான் பாகுபலி 2ம் பாகத்தில் பணிபுரியவில்லை” என்று சொல்லி பிரச்சினையை மூடிவிட்டார்.

நல்லது நடந்தால் சரி!