புனே, 

வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டிருப்பதால் மாம்பழ சீசன் கேள்விக்குறியாகி உள்ளது. மாம்பழங்களில் அல்போன்சாவுக்கு தனி மரியாதை எப்போதும் உள்ளது.  மஹாராஷ்ட்ர மாநிலம் கொங்கன் பகுதியில்தான் இந்தப்பழம் அதிகளவில் பயிராகி வருகிறது.

இந்தாண்டு நிலவும் கடும் வெயில் மற்றும் வெப்பக்காற்று காரணமாக இதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 15லிருந்து 20 சதவிதம் உற்பத்தி இருக்காது என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

வெயில் காரணமாக மாம்பழங்கள் பழுத்து உதிர்ந்து விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ரத்னகிரி, தேவ்காட் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் தற்போது வெப்பத்தின் அளவு 36 டிகிரி செல்சியசை கடந்துவிட்டதால் விவசாயிகளின் கவலை அதிகரித்துள்ளது. தண்ணீர்ப்பற்றாக்குறை அதிகரித்திருப்பதால் மாம்பழ உற்பத்தி வெகுவாக பாதிக்கும் என்கின்றனர்.

பழுக்காத மாம்பழங்களை பெட்டிகளில் 10 முதல் 12 நாட்கள் வரை வைத்து பாதுகாக்கமுடியும், அவை அழுகி விடாது என்று தெரிவித்த விவசாய ஆலோசகர் ஒருவர், இந்த வெயில் காலத்தில் வியாபாரிகளும், மக்களும் மாம்பழங்கள் அழுகிவிடாதபடி கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.

மாம்பழ உற்பத்திச் சரிவு இந்த சீசனை பாதித்திருப்பதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை சரிகட்ட கர்நாடக மாநிலத்திலிருந்து புனே சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 9 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் பெட்டிகளில் மாம்பழம் அனுப்பப் படுகிறது.