நியூயார்க்

நியூயார்க் நகரில் டிரக் மோதி பலரைக் கொன்றவர் உஸ்பெக் நாட்டை சேர்ந்தவர் என நியூயார்க் போலிஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் ஒரு டிரைவர் டிரக் ஒன்றை ஓட்டி வந்து பொதுமக்கள் மீது மோதி உள்ளார்.    இந்த தக்குதலில் எட்டு பேர் பரிதாப மரணம் அடைந்தனர்.   அந்த டிரக்கை ஓட்டி வந்தவரை நியூயார்க் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர் உஸ்பெக் நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் சைஃபுல்லொ ஹபிபுல்லஎவிக் சைபோவ் என தெரிய வந்துள்ளது.  போலீசார், “சைபோவ் கடந்த 2010 முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.  டிரக் ட்ரைவராக இங்கு தனது வாழ்க்கையை தொடர்ந்தவர், 2011-13 வரை ஆட்டோமொபைல் வர்த்தகம் நடத்தி வந்துள்ளார்.  பிறகு தனது சொந்த டிரக்கை வாங்கி அவரே ஓட்டுனராக இருந்து வந்துள்ளார்.

இவர் ஒரு டிரக்கை வாடகைக்கு வாங்கி ஓட்டி வந்து நடந்து சென்றவர்கள் மீதும், சைக்கிளில் சென்றவர்கள் மீதும் வேண்டும் என்றே மோதி உள்ளார்.   அவர்கள் மீது மோதும் போது உரத்த குரலில் “அல்லா ஹு அக்பர்” என கத்தியுள்ளார்.  29 வயதான இவர் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவரக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.” என தெரிவித்துள்ளனர்.

இதுவரை இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில் நியூயார்க் போலீசார் இது நிச்சயம் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தின் நடவடிக்கை என நம்பி வருகின்றனர்.    சைபோவ் இதற்கு முன்பே போக்குவரத்து வீதிகளை மீறிய குற்றத்துக்காக இருமுறை கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.