ku
அ.தி.மு.க.  கூட்டணியில் சீட் தரப்படும் என்று செய்தி பரவி, தரப்படாமல் விடுபட்ட கட்சிகளில் ஒன்று விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி. இதன் தலைவர் குடந்தை அரசனுக்கு திருவிடைமருதூர் தொகுதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர் பட்டியலில் இவர் பெயர் இல்லை.
இந்த நிலைியல் குடந்தை அரசனிடம் பேசினோம். அவர், “அம்மா (ஜெயலலிதா) அவர்கள் அனைத்தையும் அறிவார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் அம்மாவின் தீவிர ஆதரவாளர்கள் சிலர் விடுபட்டு போயிருப்பது உண்மைதான்.
ஆனால் விரைவில் விடுபட்ட அம்மா ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் அறிவிப்பு வரும்” என்றார் நம்பிக்கையோடு.
“ஒருவேளை அப்படி வராவிட்டால், வரும் தேர்தலில் தங்களது நிலைப்பாடு என்ன” என்றோம்.
“எங்களுக்கு இரு தொகுதிகளை எதிர்பார்த்தோம். ஒன்றாவது கிடைக்கும் என்று நம்பினோம். நிச்சயம் கிடைக்கும். ஒருவேளை எங்களுக்கு சீட் அளிக்காவிட்டாலும் அம்மாவின் ஆதரவாளர்களாகவே தொடர்வோம். அ.தி.மு.க.வின் வெற்றிக்கு உழைப்போம்”  என்றார் குடந்தை அரசன்.