08-jayendrar-300
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002ம் ஆண்டு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இவ்வழக்கில் ஜெயேந்திரர், கதிரவன் உள்ளிட்ட 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்களில் இரண்டு பேர் வழக்கு விசாரணையின்போது இறந்துவிட்டனர். ஒருவர் அப்ரூவராக மாறினார். இதனால் 9 பேர் மீது சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இவ்வழக்கில் சாட்சி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது ஜெயேந்திரரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே அவர் பதிலளித்துள்ளார். இதையடுத்து இவ்வழக்கின் இறுதி விசாரணை வரும் 5-ம் தேதி தொடங்கும் என நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. அன்றைய தினம் போலீஸ் தரப்பில் இறுதி வாதத்தை தொடங்க அனுமதி அளித்துள்ளது.