புதுடெல்லி: கடந்த 2011-18 வரையான காலகட்டத்தில் மட்டும், இந்திய ராணுவத்தில் மொத்தம் 891 ராணுவத்தினர் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக வைக்கப்பட்ட விபரப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த 2011-18 வரையான காலகட்டத்தில், தரைப்படையில் 707 வீரர்களும், விமானப்படையில் 148 வீரர்களும், கடற்படையில் 36 வீரர்களும் தற்கொலை என்ற மோசமான முடிவை எடுத்துள்ளனர். இந்த வகையில், 3 பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 891 பேர் தங்களின் சோக முடிவைத் தேடிக்கொண்டனர்.

ராணுவத்தில் நிலை இப்படியென்றால், மத்திய துணை ராணுவப் படையில், 2012-15 ஆண்டு காலகட்டத்தில் 149 வீரர்களும், எல்லைப் பாதுகாப்புப் படையில் 134 வீரர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மேலும், அதேகாலகட்டத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் 56 வீரர்களும், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் எஸ்.எஸ்.பி ஆகியப் படைப் பிரிவுகளில் தற்கொலை எண்ணிக்கை 25 என்பதாகவும், அஸ்ஸாம் ரைஃபில்ஸ் படையில் 30 என்பதாகவும் இருந்தது” என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

– மதுரை மாயாண்டி