download

பத்மினி பிறந்தநாள்
பிரபல நடிகையாக விளங்கிய பத்மினி திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தவர்.  பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மாள்  ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது.
பத்மினி நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். முதலில் சகோதரிகள் திருவாங்கூர் நடன ஆசிரியர் கோபிநாத்திடம் பயிற்சி பெற்றனர். கதகளி, பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றனர். பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்டார். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.
17 வயதில் திரையுலகில் புகுந்தார். இயக்குனர் உதயசங்கர் தனது கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் இவர்களை நடிக்க வைத்தார். ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்னிகா (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார். பின்னர் வேதாள உலகம் படத்தில் நடனமாடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த மணமகள் என்ற படத்தில் நடித்தார். இவை தவிர சிலோன் தியேட்டர்சின் கபாடி அரட்சகாயா என்ற சிங்களப் படத்திலும் நடனமாடினார்கள். தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர். வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது.  பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977இல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில்குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.
பத்மினி பெற்ற விருதுகள் சில..

  • சிறந்த நடிகை விருது (Film Fans Association in 1954, 1959, 1961 and 1966)
  • கலைமாமணி விருது(தமிழ் நாடு அரசு, 1958)
  • சிறந்த பரதநாட்டிய கலைஞர் விருது – மாஸ்கோ இளைஞர் விழா
  • பிலிம் ஃபேர் விருது(1985).
  • சோவியத் ஒன்றியம்அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.
  • பத்மினி,செப்டம்பர் 24, 2006 அன்று இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

DSC01555_thumb21
வாண்டு மாமா நினைவு தினம் (2014) 
வாண்டுமாமா என்கிற வி. கிருஷ்ணமூர்த்தி ஏப்ரல் 21, 1925  அன்று பிறந்தார்.
ஆனந்த விகடன் இதழின் ஓவியர் மாலி இவரை சிறுவர் கதைகளை எழுதத் தூண்டினார். வாண்டுமாமா என்ற புனைபெயரை இவருக்கு சூட்டியவரும் இவர் தான். ஆனந்த விகடனில் இருந்து விலகிய பின்னர் திருச்சியில் இருந்து வெளிவந்த சிவாஜி என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியரானார். அவ்விதழின் சிறுவர் மலர் பகுதியில் சிறுவர்களுக்காகக் கதைகள் எழுதினார்.
பின்னர் வானவில் என்ற மாதமிருமுறை இதழிலும், கிண்கிணி என்ற குழந்தைகள் இதழிலும் பணியாற்றினார். பின்னர் கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்காகவே கல்கி அதிபர் கோகுலம் என்ற குழந்தைகள் வார இதழைத் தொடங்கினார். இக்காலகட்டத்திலேயே இவரது பெயர் குழந்தைகளிடையே புகழ் பெறத் தொடங்கியது. 1984 ஆம் ஆண்டில் பூந்தளிர், “பூந்தளிர் அமர் சித்திரக் கதைகள்” ஆகிய குழந்தைகள் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1989 இல் இவ்வெளியீடுகள் நிறுத்தப்பட்டன. பூந்தளிர் மீண்டும் 1990 இல் வாண்டுமாமாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.
வாண்டுமாமா 160க்கும் மேலான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். மிகவும் எளிமையாக, அழகாக, அழகான சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும்.
 
972c0707-d0b2-41ee-8741-6845995b6031_S_secvpf.gif
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியவிழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது  ஐ.எல்.ஓ வின் 138  மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் ௧௪ வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
 
கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சங்கள்

  • சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் .
  • சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்
  • கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
  • பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்.
  • “குழந்தைகள் உங்களுக்குப் பிறந்தவர்கள் தான், ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல” என்பதை பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.