தலை உடைஞ்சி..
தலை உடைஞ்சி..

“தலைமைச் செயலகம் வரைக்கும் போறேன். நீயும் வா”ன்னு எடிட்டர் கூப்புட்டாரு. (இதுக்குத்தான் ஒரு டூ வீலர்கூட இல்லாத எடிட்டர்கிட்ட வேலை பார்க்கக்கூடாதுங்கிறது.. நம்ம வண்டிக்கு நாமளே டிரைவர் ஆக வேண்டிய கொடுமை!”)
என்ன முணங்கறே”னு அதட்டலா கேட்டாரு. “ஒண்ணுமில்ல சார்.. உங்ககூட வர்ற பாக்கியம் கிடைச்சிருக்கே.. ரொம்ப பெருமையா இருக்கு”ன்னு சொன்னேன்.
“என்னவோ போ..”னு அலுத்துகிட்டே, பின் சீட்டில உட்காந்தாரு. படு ஸ்பீடா தலைமைச் செயலகம் போனேன். அங்க அதிகாரிங்க, பத்திரிகைக்காரங்கனு யார் யார் கூடவோ எடிட்டர் பேசினாரு. அப்புறம், “லேட் ஆகும்போலிருக்கு.. நீ கிளம்பு”னு விரட்டிவிட்டாரு.
எதுக்கு கூப்பிட்டாரு, எதுக்கு திருப்பி அனுப்பறாருன்னு புரியாமலேயே திரும்பினேன்.  ஜெமினி பாலத்தை தாண்டி பாரதிராஜா ஹாஸ்பிடல் கிட்ட வரும்போதுதான் அதை கவனிச்சேன்.  பகீர்னு இருந்துச்சு. அப்படியே வண்டியை ஓரம்கட்டினேன்.
குப்பைங்க நடுவே.
குப்பைங்க நடுவே.

சாலை ஓரத்துல குப்பைங்க பக்கத்துல ஜெயலலிதா பேனருங்க வரிசையா இருந்துச்சு… ஊஹூம்.. கிடந்துச்சு.  எல்லாமே அழுக்காகி, உடைஞ்சி பாக்கவே பரிதாபமா இருந்துச்சு. ஒரு பேனருல, ஜெயலலிதா தலை உடைஞ்சிருந்ததை பாக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இன்னொரு பேனர்ல ஜெயலலிதா தலைமேல ஒரு காக்கா உக்காந்து கிண்டலா என்னை பாத்துச்சு. மனசு பதற, “அம்மாவைத்தான் அ.தி.மு.க.காரங்க புகழ்ந்து காக்கா பிடிப்பாங்க.. நீ, அம்மா தலையிலேயே உக்கார்றியா”னு கேட்டு, அதை “ச்சூ. ச்சூ”னு விரட்டுனேன்… ஊஹூம்.. அது நகர்றதா இல்லே!
தலையில காக்கா..
தலையில காக்கா..

சமீபத்துல அ.தி.மு.க. பொதுக்குழு நடந்தப்போ, சென்னை முழுக்க ஜெயலலிதாவை புகழ்ந்து ஆயிரக்கணக்குல பேனருங்க வச்சாங்க. சட்டத்துக்குப் புறம்பா வச்சிருக்கீங்கனு சொல்லி, அதை அகற்ற முயற்சி பண்ண மூணு பேரை, அ.தி.மு.க.காரங்க தாக்கினாங்க.. அதோட போலீசும் கேஸ்போட்டு அந்த மூணு பேரும் இப்போ புழல் ஜெயில்ல இருக்காங்க.
 
ரவுண்ட்ஸ் பாய்
ரவுண்ட்ஸ் பாய்

அந்த மூணு பேரையும் அரெஸ்ட் பண்ணி உள்ளே தள்ளின இன்ஸ்பெக்டரு, “நீங்க தெய்வமா வணங்குவங்களோட பேனர்கல யாராச்சும் அடிச்சு உடைச்சா உங்களுக்குக் கேவம் வராதா.. அது மாதிரித்தான் இதுவும். அதான் அவங்களை உள்ளே தள்ளிட்டேன்”னு பேட்டி கொடுத்தாரு.
ஹூம்… இங்க என்னன்னா சீந்துவார் இல்லாம, கிடக்குதுங்க “அம்மா”வோட பேனருங்க..! அதுவும், தினம் ஆயிரக்கணக்குல மக்கள் போயிட்டுவர்ற ஜெமினி பாலத்துகிட்ட!
“அம்மா” துதிபாடுற அமைச்சுங்களோ, இல்லே, “அம்மா”வை தெய்வமா நினைக்கிற அதிகாரிங்களோ இந்தப்பக்கம் வரவே இல்லியா..! இல்லேன்னா,  தினம் ஆயிரக்கணக்குல இந்தப்பக்கம் வர்ற யாருமே “அம்மா” பக்தர்கள் இல்லையா?
மனசு ரொம்ப பீல் ஆவுது!