jayalalitha-karuna
மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரடியாக பதிலளிக்காமல், அமைச்சர்கள் மூலமாக பதிலளித்திருப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் டெல்லியில் 26-3-2016 அன்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தமிழக மின் திட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மின் துறை அமைச்சரிடம் ஒரு முறை பேசிய போது, “அம்மாவிடம் கூறுகிறேன்” என்று சொன்னதாகவும், ஆனால் அதன் பின் பல மாதங்கள் ஆகியும் தமிழக அரசிடமிருந்து பதிலே வரவில்லை என்றும் பேசியிருந்தார். அதே அமைச்சர், ஏற்கனவே, 3-3-2016 அன்று தமிழக மின் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்த முதல் அமைச்சர் ஜெயலலிதா முன் வரவில்லை என்ற கருத்தையும், தமிழக மின் துறை அமைச்சரும் ஆலோசனை நடத்த முன் வரவில்லை என்ற கருத்தையும் தெரிவித்திருந்தார்.
மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவை தானும் சந்திக்க முடிய வில்லை என்று குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எந்தப் பதிலும் விளக்கமும் கூறாமல் இரண்டு அமைச்சர்களை விட்டு அறிக்கைகள் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அந்த அறிக்கைகளும், மத்திய அமைச்சர்களை வசைபாடும் அறிக்கைகளாக இருக்கிறதே தவிர, அவர்கள் நேரடியாகச் சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதாக இல்லை. குறிப்பாக 2014ஆம் ஆண்டு பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, 9 முறை பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இதில் 2014ஆம் ஆண்டு பா.ஜ.க. பதவியேற்றவுடன் மரியாதைச் சந்திப்புக்காக ஒரே ஒரு முறை டெல்லியில் சென்று பிரதமரைப் பார்த்ததைத் தவிர மற்ற எட்டு முறையும், பிரதமரும், மத்திய அமைச்சர்களும் சென்னையிலே முதலமைச்சர் வீட்டிலும், நிகழ்ச்சிகளிலும், பொது இடங்களிலும் சந்தித்திருக்கிறார்களே தவிர, தமிழகத்தின் கோரிக்கைகளை விவாதித்திடும் நோக்கில் ஒரு முறை கூட தமிழக முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரையோ, மத்திய அமைச்சர்களையோ சந்திக்கவில்லை என்பது நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கொடுத்த அறிக்கைகளிலிருந்தே தெளிவாகிறது. ஒருவேளை இப்போது அ.தி.மு.க. வில் உள்ள உட்கட்சிச் சூழலில் முதலமைச்சரைப் பிரச்சினையில் மேலும் சிக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிக்கையை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கொடுத்திருப்பதைப் போலத் தான் தெரிகிறது.
மத்திய மின் துறை அமைச்சர் பேசியதை அறிக்கையின் மூலம் நிதி அமைச்சர் மறுக்கிறார் என்றால், மத்திய அமைச்சர் தொடர்பு கொள்ளவே இல்லை என்று கூறத் தயாரா? மத்திய மின் துறை அமைச்சர் முதலமைச்சரைச் சந்தித்து மாநில மின்சாரப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாரா இல்லையா? அவருக்கு ஏன் சந்திக்கும் வாய்ப்பு தரப்பட வில்லை? மத்திய அமைச்சர் தமிழகத்தின் நலன் கருதி அதன் திட்டங்களுக்காகத் தானே முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டார். அவருக்கு ஏன் நேரம் தரப்படவில்லை? இதற்கு நேரடியான பதில் என்ன? நிதியமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கிறதா? “உப்பு இருக்கிறதா” என்று கேட்டால் “பப்பு இருக்கிறது” என்பதா பதில்? பட்டுக்கோட்டைக்கு வழி எது என்று கேட்டால், கொட்டைப்பாக்கு என்ன விலை என்றா சொல்வது?
அடுத்து, இந்தத் துறையின் அமைச்சர், மின்துறையின் செயல்பாடுகள் குறித்த தலை சுற்றும்படியான மிக நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறாரே தவிர, முதல் அமைச்சரைச் சந்தித்து ஏன் விவாதிக்க முடியவில்லை என்பதற்கான விளக்கத்தை அந்த நீளமான அறிக்கையில் கூறவே இல்லை. துறையிலே உள்ள ஒரு திட்டம் பற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதைச் சுட்டிக்காட்டி ஏதேதோ விளக்கங்களைச் சொல்லி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மழுப்புகிறார். தமிழக மின் வாரியத்தின் நிலைமைகளைச் சொல்லுகிறார். தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் பற்றி முதலமைச்சர் டெல்லி சென்று எப்போதாவது மத்திய அமைச்சரிடம் பேசியது உண்டா? அல்லது மத்திய அமைச்சரே நேரில் தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் கேட்டபோது மாநில நன்மைக்காக அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஒப்புக் கொண்டது உண்டா? அல்லது இதே அமைச்சரிடம் மத்திய அமைச்சர் பேசி, இந்த அமைச்சரும் முதல்வரிடம் பேசுவதாக மத்திய அமைச்சரிடம் பதில் கூறி யிருக்கிறாரே, அவ்வாறு இவர் முதல்வரிடம் பேசிவிட்டு மத்திய அமைச்சருக்கு தகவல் கூறியது உண்டா? இதற்கு அமைச்சரின் பதில் என்ன?
இன்னும் கூற வேண்டுமேயானால், மத்திய அமைச்சர் ஜவடேகர் அவர்களும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திப்பது கடினம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஏன் ஜெயலலிதாவுக்காக அறிக்கை கொடுத்துள்ள அ.தி.மு.க. வின் மூத்த அமைச்சர்களான இந்த இருவருமே முதலமைச்சர் ஜெய லலிதாவைச் சுலபமாகச் சந்திக்க முடியுமா? ஜெயலலிதா அவருடைய அமைச்சரவையிலே உள்ளவர்களையே சந்திக்க இயலாது என்கிற போது, மத்திய அமைச்சர்களையா சந்திக்கப் போகிறார்? நத்தம் விசுவநாதன் சென்ற காரையே போயஸ் தோட்டத்துக்குள் தடுத்தார்கள் என்பது தான் இன்றைய ஏடுகளில் வந்துள்ள செய்தி.
தமிழகத்தின் தேவைகளுக்காக – ஏன் அண்மையில் பெய்த கடுமையான மழை காரணமாக சென்னை மாநகரம் உட்பட மூன்று மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனவே, அதற்கு நிவாரணத் தொகை கேட்டு முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினாரே, அந்த வேண்டுகோள் என்ன ஆயிற்று என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலட்சோப இலட்சம் மக்களின் சார்பாக கேட்பதற்காகவாவது முதலமைச்சர் ஒரு முறை டெல்லி சென்றது உண்டா? அல்லது அமைச்சர்களாவது சென்று மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்தியது உண்டா? ஏன், இன்றைக்கு சென்னை துறைமுகமே மூடப்பட வேண்டிய நிலை உருவாகியிருப்பதாக ஏடுகளில் செய்தி வருகிறதே, அதற்கு என்ன காரணம்? மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முடக்கி வைத்திருப்பது தானே? எதற்காக அந்தத் திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று நான் விரிவாக தெரிவித்திருந்தேனே? அந்தத் திட்டம் பற்றிப் பேச வேண்டு மென்று மத்திய அரசின் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வந்ததா இல்லையா? அதற்காவது தமிழக அரசு ஒப்புக் கொண்டதா?
மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளையும் நடுநிலையாளர்கள் படிக்கட்டும் – அதற்கு தமிழகத்தின் இரண்டு மூத்த அமைச்சர்கள் கொடுத்த விளக்கத்தையும் படிக்கட்டும் – முடிவுக்கு வரட்டும். மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது என்றால், முதலமைச்சரே விளக்கம் அளித்திருக்க மாட்டாரா என்ன? முதலமைச்சரைப் பற்றி மத்திய அமைச்சர்களின் நேரடியான குற்றச்சாட்டுகளுக்கு, முதலமைச்சரே பதிலளித்திட முன்வருவது தானே முறை?
எப்படியோ அ.தி.மு.க. வின் ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அ.தி.மு.க. ஆட்சியினரும் திட்டம் வகுத்து எதுவும் செய்ய வில்லை; மத்திய அரசு தன்னிச்சையாக மாநிலத்திற்கு உதவிட முன் வந்தும் அதையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது இந்த ஒரு நிகழ்வின் மூலம் நிரூபணமாகிறது அல்லவா?’’என்று தெரிவித்துள்ளார்.