irctc1
புது தில்லி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும், வெளிநாட்டினரும் வெளிநாட்டில் இருந்தபடியே இந்திய ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போதைய நிலையில் வெளிநாட்டினரும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் முகவர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் உறவினர்கள் மூலமே தங்களுக்கான ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.
புதிய திட்டத்தின்படி வெளிநாட்டினர், தாங்கள் வசிக்கும் நாட்டிலிருந்தே ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்கான மாற்றங்களை செய்வதற்கு ஐஆர்சிடிசி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார். வெளிநாட்டினர் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் நேரடியாக பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்குரிய வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் அது அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பிரபலமாக உள்ள ‘மகாராஜா’, ‘பேலஸ் ஆன் வீல்’ உள்ளிட்ட ரயில்களில் ஏராளமான வெளிநாட்டினர் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும், முகவர்கள் மூலமே தங்களது பயணச்சீட்டை முன்பதிவு செய்கின்றனர். இந்திய ரயில்வேவின் அங்கமான ஐஆர்சிடிசி நிறுவனம், ரயில் பயணங்களுக்கான பயணச்சீட்டுகளை பதிவு செய்யும் இணையதளத்தை இயக்கி வருகிறது. அந்த இணையதளம் நிமிஷத்துக்கு 15,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.