மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில்  அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.  இங்கு 5ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. தற்போது  இங்கு ஒரே ஒரு மாணவி மட்டுமே கல்வி பயின்று வருகிறார்.
one-student-near-dindigul_SECVPF
சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வந்த அரசு பள்ளி, தற்காலங்களில் புற்றீசல் போல தொடங்கப்படும் தனியார் பள்ளிக்கு இணையாக போட்டி போட முடியாத நிலையே உள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை  தனியார் பள்ளிகளில் சேர்க்க தொடங்கினர்.
பல குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்காக வெளியூர்  பிழைக்க சென்று விட்டனர்.  இதன் காரணமாக  அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்து வந்துள்ளது. 2015ம் ஆண்டு 5 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர்.  அவர்களில் 4 பேர்  5-ம் வகுப்பை முடித்து வெளியேறி விட்டனர். கலைவாணி என்ற ஒரே ஒரு மாணவி மட்டும் தற்போது 5-ம் வகுப்பில் தொடர்ந்து படித்து வருகிறார். இந்த ஒரே ஒரு மாணவிக்காக மட்டுமே பள்ளிக்கூடம் செயல்படட்டு வருகிறது.  2 ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள்.
ஆனால் 3 சத்துணவு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஒரு மாணவிக்காக சமையல் செய்ய முடியாததால் அருகில் உள்ள மால்நாயக்கனூர் பள்ளிக்கு சென்று சத்துணவை வாங்கி வந்து மாணவிக்கு வழங்குகின்றனர்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை  பேசும்போது, இந்த ஊரில் தற்போது பள்ளி பருவத்தில் குழந்தைகள் ஏதும் இல்லை. எனவே ஒரே ஒரு குழந்தைக்காக பள்ளி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதே நிலை நீடித்தால் பெரும்பாலான அரசு பள்ளிகளை விரைவில் மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிகிறது.