ஒரே ஒரு முஸ்லிம் குடும்பத்துக்காக மசூதி கட்டிய சீக்கியர்கள்

லூதியானா: ஒரு முஸ்லிம் குடும்பத்துக்காக சீக்கிய கிராமத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது.
மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கி அரசியல் லாபம் அடையும் செயல்களில் அரசியல் கட்சியினர் தான் ஈடுபடுவார்கள். ஆனால், இரு மத மக்களிடையே எப்பவும் நல்லிணக்கம் தான் நிலவும் என்பதற்கு உதாரணமாக நிகழ்வு பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் ஜஹரான் பகுதியில் மாலா என்ற சீக்கிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரே ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் இருந்த மசூதி ஒன்று 1947ம் ஆண்டில் இடிந்துவிட்டது. இதை புணரமைக்க முடிவு செய்து பஞ்சாப் இமாம் முகமது உஸ்மான் லூதியான்வி கிராம தலைவர்களை நாடினார்.
இதையடுத்து மசூதியை புதுப்பிக்க கிராம மக்கள் உதவியதோடு, நிதியுதவியும் அளித்தனர். கட்டுமான பணிகளிலும் கிராம மக்கள் ஈடுபட்டனர். பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இமாம் அந்த மசூதியை திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு கிராமத்தில் சமுதாய சமையல் செய்து பரிமாறினர். பஞ்சாப் மாநிலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது அரிதான விஷயமாகும்.