nallakannu
உடுமலைப்பேட்டையில் நடந்த சாதி ஆணவ வெறியாட்டத்தில் வெட்டுப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார் கவுசல்யா. இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று கவுசல்யாவை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மருத்துவ உதவிக்காக 30 ஆயிரம் பணம் கொடுத்தார்.
பின்னர் அவர் வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் பேசியபோது, காதல் திருமணம் செய்து கொண்ட சங்கர் கொலை செய்யப்பட்டதை அனுமதிக்க முடியாது. பட்டப்பகலில் இந்த கொலை நடந்துள்ளது. கவுசல்யாவையும் கொலை செய்யும் நோக்கத்திலேயே வெட்டியுள்ளனர். அவர்தலையில் காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொடூரமான இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் இருப்பவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும். வயது வந்த இருவர் காதலித்து 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு கவுசல்யாவின் பெற்றோர் அந்த பெண்ணை பயமுறுத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.
போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யும் அளவுக்கு துணிச்சல் வந்துள்ளது. இந்த ஆணவ கொலை தமிழ்நாட்டில் நடைபெறும் 81–வது ஆணவ கொலையாகும். இதில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவ கொலைகளை தடுக்க தனிசட்டம் கொண்டு வரவேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
மன உளச்சலுக்கு ஆளான கவுசல்யா தைரியமாக வந்து கைது செய்யப்பட்டவர்களை அடையாளம் காட்டியிருப்பதே பெருமைக்குரியது’’என்று தெரிவித்தார்.