சென்னை:

காவிரி தண்ணீர்தான் வேண்டும் என்றால் கிடைக்கப்போவதில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் தெரிவித்ததாவது:

“சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது? ஐ.ஐ.டி. என்பது அகில இந்திய கல்வி நிறுவனம். அது தமிழகத்தின் பொறியியல் கல்லூரி கிடையாது. நாடாளுமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஐ.ஐ.டி.யில் மகாகணபதி பாடலை பாடினால் ஒன்றும் தவறு கிடையாது.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு அமைந்து ஒரு வருடம் ஆகிறது. அதில் என்ன சொல்லமுடியும். 1,500 கைதிகள் விடுதலை செய்ய போகிறது என்று கூறியது. அது நடந்ததா?

ஜெயலலிதா சிலையில் மாற்றங்களை கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளனர். இது பெரிய பிரச்சினை கிடையாது.

மத்திய-மாநில அரசுக்கு இடையே எத்தகைய உறவு நிகழ்கிறது என்பது பற்றி எனக்கு தெரியாது.

காவிரி தண்ணீர்தான் வேண்டுமா இல்லை தண்ணீர் வேண்டுமா என்று தமிழக மக்களை கேட்கிறேன்.

தண்ணீர் வேண்டும் என்றால் அதற்கு சுலபமான வழியை காட்டுகிறேன். தமிழக அரசு இதற்கான வழிமுறையை கேட்டால் செய்து தருகிறேன். காவிரி தண்ணீர்தான் வேண்டும் என்றால் கிடைக்கப்போவதில்லை” என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.