குடிபோதையில் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு ஆர்.டி நரைச் சேர்ந்த கன்னட நடிகர் அபிஷேக். “அவன் அவள் அது” என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனி 2-வது தெருவில் உள்ள தனியார் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் அபிஷேக் தங்கி வருகிறார்.

நேற்றிரவு இந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு தனது நண்பர்களுடன் சென்ற விமல், அபிஷேக்கை ஊழியர் என நினைத்து அறை இருக்கிறதா? என்று கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றி, அபிஷேக்கை தனது நண்பர்களுடன் சேர்ந்து விமல் தாக்கியதாகத் தெரிகிறது.

காயமடைந்த அபிஷேக் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவின் கீழ் நடிகர் விமல் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.