தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
puli
“ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான் அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்குவான் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவான் .விறகு வெட்டுவான் .அதை கொண்டுகிட்டு பொய் விற்பனை செய்வான் .
ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான் .
ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான் .
அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . ஏதோ விபத்துல இழந்துடுச்சு போல இருக்கு ! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு
அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம்.  ” இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை…!  அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?” அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்
இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது. அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டான். அப்படியே என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சான். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா … ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது … அதை சாப்பிட்டது.  போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது
புலி போனதுக்கபுறம் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது. மிச்சமிருந்ததை சாப்பிட்டது.   திருப்பதியா போய்ட்டது ! இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு அந்த ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கான்
இப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சான்
“ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ.. தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.  நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும்..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டணும்…?” –  இப்படி யோசிச்சான்.
அதுக்கப்பறம் அவன் காட்டுக்கே போறதில்லை . கோடாறியை தூக்கி எறிஞ்சான்.  பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டான். அப்பப்போ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான்.  ” கடவுள் நம்மை காப்பாத்துவார்… அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் “- அப்படினு நம்பினான். கண்ணை முடிகிட்டு. கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டான்.
ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு…  சாப்பாடு வந்த பாடில்லே!  இவன் பசியால வாடிப் போனான்.  உடம்பு இளைச்சு போச்சு.  எலும்பும் தோலுமா ஆயிட்டான்.
ஒரு நாள் ராத்திரி நேரம். கோயில்ல யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தான் …
“ஆண்டவா … என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா..? நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன்… என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே … இது நியாயமா ?”..- ன்னான்.
இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்…
” முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து!” அப்படின்னாராம் .
இன்னைக்கு பொதுவா கடவுள் பக்தி மக்கள் கிட்ட எப்படி இருக்குங்கறதுக்காக இப்படி ஒரு கதையை பெரியவர்கள் சொல்றது உண்டு .