கார்ட்டூம், சூடன்

சூடான் தலைநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 23 பேரில் 18 பேர் இந்தியர்கள் மற்றும் அதில் 3 பேர் தமிழர்கள் ஆவார்கள்

சூடான் நாட்டின் தலைநகரம் கார்ட்டூமில் சலோகி என்னும் டைல்ஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.  இங்கு ஏராளமான வெளிநாட்டினர் பணி புரிந்து வருகின்றனர்.  குறிப்பாக இந்தியர்கள் அதிகம் பணி புரிந்து வருகின்றனர்.   இந்த தொழிற்சாலையில் நேற்று முன் தினம் டாங்கர் லாரியில் எடுத்து வரப்பட்ட எரிவாயு இறக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த பெரும் தீ விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 23 பேர் உடல் கருகி மரணம் அடைந்தனர்.  அத்துடன் 130க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர்.  இந்தியத் தூதரக தகவலின்படி மரணமடைந்த 23 பேரில் 18 பேர் இந்தியர்கள் என்பதும் அவர்கள் பீகார் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த 18 பேரில் மூவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இவர்கள் நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ராஜசேகர் முருகன் மற்றும் வெங்கடாசலம் என்பவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.  இதில் வெங்கடாசலம் குறித்த முழுத் தகவல் அறிவிக்கப்படவில்லை.   அத்துடன் மேலும் தமிழர்கள் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமகிருஷ்ணன்

 

இம்மூவரில் ராமகிருஷ்ணன் என்பவர் நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ள ஆலங்குடிச்சேரி மேலத்தெருவில் வசித்து வரும் ராமலிங்கம்-முத்துலட்சுமி தம்பதியின் மகன் ஆவார் . கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சூடான நாட்டில் உள்ள சலோமி செராமிக் தொழிற்சாலையில் பிரஸ் இன்சார்ஜ் ஆக இவர் பணியில் சேர்ந்தார்.

ராஜசேகர் முருகன்

 

இரண்டாமவரான கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த, ராஜசேகர் முருகன் என்பவர் மரணம் அடைந்துள்ளார்.. ராஜசேகர் முருகனுக்குக் கலை சுந்தரி என்கிற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தீ விபத்து நடந்த சமயத்தில் சூடானில் பணி புரிந்துக் கொண்டிருந்த ராஜசேகர், மனைவியிடம் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டு இருந்தார். தீ விபத்து ஏற்பட்டவுடன் செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.  அதன் பின்னர் அவரது மரணச் செய்தி மனைவிக்குக் கிடைத்துள்ளது என்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது..