Jayalalithaa-campaign
தமிழக சட்டமன்ற தேர்தல் மே 16-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க. கடந்த 4-ந் தேதி முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 7 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அன்றே, தனது சூறாவளி பிரசார பயண திட்டத்தையும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தார். தமிழகத்தில் 14 நாட்களும், புதுச்சேரியில் ஒரு நாளும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதன்படி, சென்னை தீவுத்திடலில் இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தனது சூறாவளி பிரச்சாரத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்குகிறார்.
இதற்காக தீவுத்திடல் மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு முன்பு 10 மீட்டர் அளவுக்கு இடைவெளிவிட்டு, தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு பின்புறம் தொண்டர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 35 ஆயிரம் பேர் வசதியாக அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
சென்னை தீவுத்திடலில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு பிரச்சார வேனில் புறப்படுகிறார்.
தீவுத்திடலில் உள்ள 3-வது எண் கேட் வழியாக பொதுக்கூட்ட மேடைக்கு பின்புறம் வேனில் வந்து இறங்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, மேடைக்கு வந்து தொண்டர்கள் மத்தியில் கையசைக்கிறார். பின்னர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிமுகம் செய்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.