பெற்றோர் பணம் தராததால் சொந்த வீட்டில் திருடும் பிள்ளைகளை கேள்வி பட்டுள்ளோம். தான் வேலை பார்க்கும் ‘டாஸ்மாக்’ கடையிலேயே பூட்டை உடைத்து கொள்ளையடித்த ஊழியர்களை கேள்வி பட்டதில்லை அல்லவா?

பார்க்கலாம். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ‘டாஸ்மாக்’ மதுபானக்கடையில் மணிவாசகமும், மாரியப்பனும் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு கண்காணிப்பாளருடன், இந்த இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த இரு ஊழியர்களும், கடையின் பூட்டை உடைத்து பெட்டியில் இருந்த 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்துச்சென்றுள்ளனர்.

நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் காவலாளி, அங்கு வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மணப்பாறை போலீசில் அவர் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில், கடையின் விற்பனையாளர்களே கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

‘’சொந்த’’ கடையிலேயே கன்னக்கோலிட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் மணிவாசகமும், மாரியப்பனும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

-பா.பாரதி