Latest-Beautiful-Dresses-Collection-2014-For-Women’s-By-Maria-3

சென்னை: மாணவ, மாணவியர் ஜீன்ஸ் அணிந்து வந்தால், அவர்களுக்கு, ‘கேம்பஸ் இன்டர்வியூ’ எனப்படும், வளாக நேர்காணலில் வேலை வழங்கப்படாது’ என, ஐ.ஐ.டி. நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்தில்தான், தனது வளாகத்தில் செயல்பட்டு வந்த “அம்பேத்கர் பெரியார் மன்றத்தை” தடை செய்து சர்ச்சைக்கு உள்ளானது ஐ.ஐ.டி. நிறுவனம். பெரும் எதிர்ப்பால் தடையை விலக்கிக்கொண்டது.

இந்த நிலையில் ஆடைக்கட்டுப்பாடு குறித்து அறிவிப்பு செய்துள்ளது.

இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில், கல்லுாரி வளாகத்தில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம், வேலை வாய்ப்பு வழங்கப்படும்.  இதன்படி, ஐ.ஐ.டியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு , டிச., 1ல், கேம்பஸ் இன்டர்வியூ நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கு, ஆடைக் கட்டுப்பாட்டை, ஐ.ஐ.டி., அறிவித்துஉள்ளது.

அதன் விவரம் வருமாறு:
* கல்லுாரி வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வரும் போதும், வேலைவாய்ப்பு தேர்வு எழுத வரும் போதும், மாணவர்கள் காலர் வைத்த சட்டை அல்லது காலர் வைத்த டீ – ஷர்ட் அணியலாம்; ஆனால் அதில், எந்த எழுத்துக்களும் இருக்கக் கூடாது. சட்டையை, ‘டக் இன்” செய்திருக்க வேண்டும். முழுக்கால் பேன்ட் அணிய வேண்டும்.
* மாணவியர், ‘சல்வார் கமீஸ்’ எனப்படும் (உடலைப் பிடிக்காத) ஆடை மட்டுமே அணியலாம்; தலை முடியை முறையாக சீவியிருக்க வேண்டும். நன்றாக சுத்தம் செய்து, ‘பாலிஷ்’ செய்யப்பட்ட காலணி அணிந்திருக்க வேண்டும்.

* டிச., 1 முதல் நடக்கும் இன்டர்வியூவில் பங்கேற்க வரும் போது, அலுவலக ரீதியாக பயன்படுத்தும் முழுக்கை சட்டை மற்றும் முழுக்கால் பேன்ட் மட்டுமே அணிய வேண்டும். கண்டிப்பாக, ஜீன்ஸ் அணியக் கூடாது.

* இந்த ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால், வேலை வாய்ப்புக்கான அனுமதி மறுக்கப்படும்.

இவ்வாறு சென்னை ஐ.ஐ.டி., நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.