மதுரை:

மிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி பாராளுமன்றம் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதை எதிர்த்து உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18ந்தேதி   புகழ்பெற்ற மதுரை  சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. ஏப்ரல் 7-ஆம் தேதி மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், முக்கிய வைபவமான தேரோட்டம் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். அன்றைய தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பது, பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த சமயத்தில் கிறிஸ்தவர்களின் நோன்பு காலம் என்பதாலும், தேர்தலை தள்ளி வைக்கக்கோரி குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக,  மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளி வைக்க கோரி வழங்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அப்போது தேர்தல் அறிவித்திருக்கும் தேதியன்று புகழ்பெற்ற சித்திரை திருவிழா நடப்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அதனால் வாக்களிக்க மக்களுக்கு சிரமம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  தமிழக தேர்தல் அன்று மதுரையில் சித்திரை தேர் திருவிழா. பற்றி தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே தெரியப்படுத்தினீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழங்கறிஞர் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை இன்றைக்குள் தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் காரணமாக தமிழகத்தில் அல்லது மதுரை பகுதிகளில் மட்டுமாவது தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந்தேதிக்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக உறுதிப்படாத தகவல்கள் பரவி வருகின்றன…