பெங்களூரு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளதைக் கண்டித்து கன்னட சலவளி வாட்டாள் கட்சி தலைவர் நாகராஜ் போராட்டத்தில் ஈடுபட்டார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவை கண்டித்து கன்னட சலவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று போராட்டம் நடத்தினார். அப்போது வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

“காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. எக்காரணம் கொண்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது. வருகிற 5-ம் தேதி கர்நாடகம்-தமிழக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்.

அன்றைய தினம் தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக கர்நாடகத்திலும் முழு அடைப்பு நடத்துவோம். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நாங்கள் கண்டிக்கிறோம். காவிரி விஷயத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கர்நாடகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் படங்களை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்” என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.

 

#vatal nagaraj #protest  #tamil Nadu