Karunanidhi 11
“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற புகழ்ப் பெயர் மறைந்து, அ.தி.மு.க. ஆட்சியில் “தற்கொலைகள் பெருகும் தமிழ்நாடு” என்ற அவப்பெயர் பரவி வருவது, தலை குனிவை ஏற்படுத்துகிறது.’’என்று
திமுக தலைவர் கருணாநிதி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’’கடந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியில் மற்றுமோர் சாதனையாக தமிழகத்தில் தற்கொலை எண்ணிக்கை பெருகியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றால்; மாணவர்கள் தற்கொலைப் பட்டியலில் மகாராஷ்ட்ரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளன என்று மத்திய அமைச்சர் ஒருவரே தெரிவித்து உள்ளார். மாநிலங்களவையில் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், ”கடந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் 7,753 மாணவர்களும், யூனியன் பிரதேசங்களில் 315 மாணவர்களும் என மொத்தம் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 1,191 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 853 பேரும், மேற்கு வங்கத்தில் 709 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர்” என்று தெரிவித்து உள்ளார்.
2014ஆம் ஆண்டு – மொத்த தற்கொலை என்ற கணக்கைப் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்திலும், மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்திலும், மேற்கு வங்கம் மூன்றாவது இடத்திலும் இருந்திருக்கிறது. அந்த வரிசையில் தமிழகத்தில் அதிகாரிகள் தற்கொலையும் பெருகி வருகிறது. இதன் அடுத்த கட்டமாகத் தான் நேற்றையதினம் மதுரையில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மதுரையில் அமைச்சர் ஒருவர் அலுவலகத்திலே வெடி குண்டு வீசப்பட்ட செய்தி வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே மதுரையில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் கொலை செய்யப்பட்ட செய்தியும் வந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை மாநகரில் பரவி வரும் வன்முறைக் கலாச்சாரத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், நேற்றையதினம் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துராஜா என்பவர் மதுரை மாநகராட்சியில் 7வது வார்டு அதிமுக கவுன்சிலராகவும், வட்டச் செயலாளராகவும் இருந்தவர், தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார். அவர் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனக்கும், தன் கட்சித் தலைவியான ஜெயலலிதாவுக்கும் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் அ.தி.மு.க. வின் பாரபட்சமான – அரைகுறை நேர்காணலுக்கு தன்னை அழைக்கவில்லை என்ற வேதனை மற்றும் விரக்தியின் காரணமாக, தன் பெயர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் போய் விடுமோ என நினைத்து, மன அழுத்தம் மிகுந்து தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் ஏடுகளிலே வந்திருப்பது மிகவும் அதிர்ச்சி யாக உள்ளது. மேலும் தான் வேட்பாளராக நிற்பதற்காக அவர் இலட்சக் கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்து விட்டாரா என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தும் செய்திகளும் வருகின்றன. தேர்தலில் போட்டியிட “சீட்” வாங்கித் தருவதாகச் சொல்லிப் பலரிடமும் பல நூறு கோடி ரூபாய் வசூல் செய்து விட்டார்கள் என்று அ.தி.மு.க. அமைச்சர்களைப் பற்றி வருகின்ற பத்திரிகைச் செய்திகள் இப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு அடிப்படையான ஆதாரமாக இருப்பதால், தற்கொலை செய்து கொண்டு மாண்ட அதிமுக கவுன்சிலர் முத்துராஜாவின் மறைவு குறித்து ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக, சட்டப்படி உரிய விசாரணையை விரைவாக நடத்திட வேண்டும்.
இப்படிப்பட்ட தற்கொலை களுக்குக் காரணம் யார் என்பதையும் கண்டறிந்திட வேண்டும். வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலையை சி.பி., சி.ஐ.டி. விசாரணை மூலம் மறைத்திட முயற்சித்ததைப் போல இதையும் மூடி மறைத்து விடக் கூடாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையைச் சேர்ந்த வணிக வரித் துறை அதிகாரி, முத்துக்குமரன் தனது மேல் அதிகாரி கொடுத்த நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலினால் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார். இதற்கெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியினர் தமிழக மக்களுக்கு உரிய விளக்கங்களை உடனடியாக அளித்திட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். “கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற புகழ்ப் பெயர் மறைந்து, அ.தி.மு.க. ஆட்சியில் “தற்கொலைகள் பெருகும் தமிழ்நாடு” என்ற அவப்பெயர் பரவி வருவது, தலை குனிவை ஏற்படுத்துகிறது.’’என்று தெரிவித்துள்ளார்.