சென்னை:

திமுக பொருளாளரின் கிண்டல், கேலித்தனமான பேச்சுக்கள் கூட்டணி கட்சிகளுக்குள் சர்ச்சை கைளை உருவாக்குகிறது என்று  இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபபடும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி குழப்பங்கள் நீடித்து வருகிறது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஏற்கனவே பங்குபெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் இடம்பெறும் என்று நம்பப்படுகிறது.

முத்தரசன் – இந்திய கம்யூனிஸ்டு

இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், தொகுதி பங்கீடு நடைபெற்றால்தான் கூட்டணி உறுதி என்றும், தாலி கட்டினால்தான் பொண்டாட்டி என்றும் கூறியதும் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.

இதன் காரணமாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் அதிருப்தி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி அப்போது முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று கூறினார்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கிண்டல், கேலியாக பேசக்கூடியவர். கூட்டணி குறித்து அவர் பேசிய சில கருத்துக்கள் தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குகிறது என்றவர், ‘ தி.மு.க. கூட்டணியில் திருமாவளவன் இடம் பெற்றுள்ளார். இதில் பா.ம.க.வை சேர்ப்பதா? வேண்டாமா? என்பதை கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. தான் முடிவு செய்யும் என்று கூறினார்.

வரும் 27ந்தேதேதி கோவையில்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு கோவையில் நடைபெறுகிறது என்றவர், இதில்,  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் உள்பட 9 கட்சி தலைவர்கள் பங்கேற்று பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.