டில்லி

நடைபெற உள்ள மக்களவை தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்காததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் தேதிகளை அந்த வருடம் மார்ச் 5 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கு பிறகு நடந்த குஜராத் மாநில சட்டப் பேரவை தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல் தேதிகளை வேண்டுமென்றே தேர்தல் ஆணையம் தாமதமாக அறிவித்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இந்த வருடத்துக்கான மக்களவை தேர்தலுக்கான தேதிகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தாலிவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அகமது படேல் தனது டிவிட்டரில், “பிரதமர் மோடி தனது அரசு பயண நிகழ்வுகளை நிறைவு செய்த பிறகு பொதுத் தேர்தல் தேதிகளை அறிவிக்கலாம் என ஆணையம் காத்துக் கொண்டு உள்ளதா? ஏனென்றால் அரசு நிகழ்ச்சிகள் என்னும் பெயரில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் நாளிதழ்களில் அரசியல் கூட்டங்களின் விளம்பரங்கள்தான் வருகின்றன.

அநேகமாக அரசு பணத்தில் கடைசிக் கட்டம் வரை ஆளும் கட்சி தேர்தல் பிரசாரம் செய்ய்யட்டும் என தேர்தல் ஆணையம் கருதுகிறது என எனக்கு தோன்றுகிறது. அத்துடன் அவ்வாறு அரசுப் பணத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய ஆளும் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நேரம் தருகிறது என்பது போல் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது” என பதிந்துள்ளார்.