புது டெல்லி:
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லவில்லை என்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பணிநிமித்தமாக தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வசித்துவந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு அணி அணியாக நடைபயணமாகவே திரும்ப தொடங்கினர். இவர்களில் சிலர் பயணத்தின்போதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் இருந்து அண்மையில் மத்தியப் பிரதேசம் திரும்பிய கர்ப்பிணிக்கு சாலை ஓரத்திலேயே குழந்தை பிறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்புவது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும், உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக, மத்திய அரசு நாள்தோறும் 100 சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்தப் போக்குவரத்து வசதிகள் குறித்து தொழிலாளர்களுக்கு தேவையான விழிப்புணர்வு, புரிதலை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். எந்தவொரு தொழிலாளரும் நடைபயணமாக சொந்த ஊர் திரும்பவில்லை என்பதையும் அனைத்து மாநில அரசுகளும் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு நடந்து செல்பவர்களை கண்டால், அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர்  கொடுத்து அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.