chandrakumar-
தேமுதிக கொள்கைபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏ, துணைச் செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர். வீரப்பன், திருவள்ளுர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சி.எச்.சேகர் எம்எல்ஏ, சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்எல்ஏ, வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜெ.விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள், மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், 95 சதவிகித தேமுதிகவினரின் விருப்பப்படி திமுக கூட்டணியில் சேர வேண்டும் எனவும், இதற்காக விஜயகாந்த் தங்களை அழைத்து பேச வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் விஜயகாந்த் கட்சியில் இருந்து நீக்கினார்.
இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நீக்கப்பட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, ’’வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, பாஜகவுடன் இணைவதாகத்தான் முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தேமுதிகவின் சில கோரிக்கைகளை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால் கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை.
அதே நிலையில், தேமுதிக வைத்த அனைத்து நிபந்தனைகளையும் மக்கள் நலக் கூட்டணி ஏற்றுக் கொண்டதால், அவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆரம்பத்திலேயே திமுகவுடன் தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அது உண்மை’’ என்று சந்திரகுமார் தெரிவித்தார்.