bala
தி.மு.க. – அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் “இவருக்கு சீட்டா” என்றும் “இவருக்கு சீட் இல்லையா” என்றும் கட்சிக்குள்ளேயே வாதப்பிரதிவாதங்களும், போராட்டம் ஆர்ப்பாட்டங்களும் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆனால் சிறப்பாக செயல்பட்ட எம்.எல்.ஏ. ஒருவருக்கு இந்த முறை சீட் தரப்படவில்லை. அவரும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
அதிசயமாக இருந்தாலும் அது உண்மைதான்.  அவர் – சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த திண்டுக்கள் எம்.எல்.ஏ. பாலபாரதி.
தற்போதைய சட்டசபையில் மார்க்சிஸ்ட் கட்சியின் குழுத் தலைவராக இருக்கும் பாலபாரதி,  மாநிலக் குழுவிலும் உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார். அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளரகவும் உள்ளார். மேலும்  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட பாலபாரதி, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேரந்தெடுக்கப்பட்டவர்.
சட்டசபையிலும், தொகுதியிலும் சிறப்பாக செயலாற்றிய எம்.எல்.ஏ. என்று பெயர் பெற்ற பாலபாரதிக்கு இந்தமுறை சீட் தரப்படவில்லை.
“மக்கள நலக் கூட்டணி, தேமுதிகவுடன் கூட்டணி வைத்து அறிவிப்பு வெளியான போது, இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நல்லதோர் வீணை செய்தே என்று பதிவிட்டிருந்தார். இது தேமுதிகவுடன் சி.பி.எம். கட்சி கூட்டணி வைத்ததை விமர்சித்து எழுதப்பட்ட பதிவு என்று சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து  குறிப்பிட்ட அந்த பதிவை பாலபாரதி  உடனடியாக அகற்றி விட்டார்.  மேலும் அது வேறு ஒரு நிகழ்வு தொடர்பானது என்று  விளக்கமும் அளித்தார்.
இந்த விவகாரத்தினால்தான் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது என்று பேச்சுகிளம்பியுள்ளது. பாலபாரதியை கேட்டால் சிரிக்கிறார்.
“எங்கள் கட்சியின் விதி தெரியாமல் பேசுகிறார்கள். சி.பி.எம். கட்சியைப் பொறுத்தவரை, ஒருவருக்கு இரு முறைக்கு மேல் வாய்ப்பு தரப்படுவதில்லை. அதுதான் காரணம்” என்றவர், “எங்கள் கட்சியைப் பொறுத்தவரை எவரும் தேர்தலில் நிற்க தன்முனைப்பு கொள்வதில்லை. கட்சியே முடிவு செய்து வேட்பாளரை அறிவிக்கும். தவிர, எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பியாகவோ இருந்துதான் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று எங்கள் கட்சியினர் நினைக்கமாட்டார்கள். மக்கள் பணி செய்ய அவையும் ஒரு வாய்ப்பு அவ்வளவுதான்” என்கிறார் அதே புன்னகையுடன்.