பா.ஜ.க.மேலிடத்துடன்

தம்பிதுரை சமரசம்…

கரூர் கிடைக்குமா?

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பா.ஜ.க.தலைவர்களிடம் மட்டுமில்லாது-அ.தி.மு.க.ஒருங் கிணைப்பாளர்களின் விரோதத்தையும் ஒரு சேர சம்பாதித்திருந்தார்-மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.

அ.தி.மு.க.-பா.ஜ.க. தேர்தல் உடன்பாடு கண்டபின் தனது நிலையை ஒரே நாளில் மாற்றிக்கொண்டார்- தம்பிதுரை.

அடுத்த கட்டமாக –பா.ஜ.க. தலைமையுடனும் கை குலுக்கி கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் பா.ஜ.க.தேர்தல் பொறுப்பை கவனிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் நேற்று முன்தினம் இரவு திருமலை  சென்றிருந்தார். தற்செயலாக அங்கு தம்பிதுரையும் சாமி தரிசனம் செய்ய குடும்பத்தோடு சென்றிருந்தார்.

தனியார் விடுதியில் தங்கி இருந்த கோயலும், தம்பிதுரையும் அளவளாவி கொண்டனர். பா.ஜ.க.வுடன் ,தம்பிதுரைக்கு இருந்த பனிப்போர் –இந்த சந்திப்பில் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

‘’நாங்கள் நீண்ட கால நண்பர்கள்.வாஜ்பாய் அரசில் நான் அமைச்சராக இருந்த போதே கோயல் எனக்கு நண்பர்.’’என்று இந்த சந்திப்புக்கு விளக்கம் அளித்தவர்-‘’வரும் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெறும்.’’ என்றார்.

பியூஷ்கோயல் கூட்டணி குறித்து அ.தி.மு.க.தலைமையிடம் பேசியபோது‘தம்பிதுரைக்கு சீட் கொடுக்க கூடாது என்று  நிபந்தனை விதித்தாக கூறப்பட்டது.திருமலை சந்திப்பு-தம்பிதுரைக்கு திருப்பத்தை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம். மீண்டும்  அவருக்கு கரூர் தொகுதி ஒதுக்கப்படலாம்.