டில்லி

சுப்ரமணிய சாமி தாம் பிரதமருக்கு போன வருடம் மே மாதத்தில் பொருளாதாரம் சீர்குலையும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருந்ததாக கூறி உள்ளார்.

பாராளுமன்ற மேலவையில் பா ஜ க உறுப்பினராக உள்ளவர் சுப்ரமணிய சாமி.  இவர் தனது அதிரடி அறிக்கைகள் மற்றும் பேட்டியின் மூலம் அடிக்கடி பாபரப்பு ஏற்படுத்தி வருவது தெரிந்ததே.  தற்போது ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இந்திய பொருளாதாரம் பற்றி கூறிய கருத்துக்கள் பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

அந்த பேட்டியில், “தற்போது இந்தியப் பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.  எந்த நேரத்திலும் அது விழுந்து நொறுங்கி விடும் வாய்ப்பு உள்ளது.  இதை அரசு நினைத்தாலும் இப்போதும் சரி செய்யலாம்.   ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காவிடில், அனைத்து வங்கிகளும் திவாலாகி,  எல்லா தொழிற்சாலைகளும் மூடப்பட்டு விடும்.

கடந்த வருடம் மே மாதம் நான் இது குறித்து பிரதமருக்கு 16 பக்க கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளேன்.   அதில் பொருளாதாரத்தில் வீசப்போகும் ஐந்து புயல்களைப் பற்றி அப்போதே எச்சரித்துள்ளேன்.  ஆனால் அவர் அதை சட்டை செய்யவில்லை.  தற்போது இந்தியா அனத்து வளர்ச்சியிலும் குறைந்து வருகிறது.   ஆனால் அது உயர்ந்துள்ளதாக தவறாக அரசால் காட்டப்படுகிறது.

இந்திய பொருளாதாரத்தை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.   அதில் முக்கியமானது வருமான வரி ஒழிப்பு.   மக்களுக்கு அதுதான் நன்மை பயக்கும்.  மிகவும் எளிதான வருமான வரி ஒழிப்பை இந்த அரசு செய்ய ரொம்ப தயங்குகிறது.  ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் சேமிப்பு உயரும்.   மக்களின் பணம் சேமிப்பாக வங்கிகள் மூலம் அரசுக்கு வந்து சேரும்.   பல முன்னேற்றப் பணிகளை அரசு நிறைவேற்ற முடியும்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் பல தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.  அமெரிக்காவில் அது போலத்தான் வங்கிகள் செயல் படுகின்றன.  அண்ட்கு வட்டி விகிதம் வெறும் 2% மட்டுமே.  ஆனால் இந்தியாவில் 12-18% வட்டி விதிப்பது கொடுமையிலும் கொடுமை.   அதனால் தான் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் இங்கு அஹிகரித்துள்ளது” என கூறி உள்ளார்.