makkal-nala-kuttu-iyakkam-thirumavalavan-vaiko--vijayakanth
மக்கள் நலக்கூட்டணித்தலைவர்கள் வைகோ, திருமாவளவன், இரா.முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று தேமுதிக தலைமை அலுவலகம் வந்தனர். அங்கே விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளர் என்று முடிவானது.
’பழம் கனிந்து கொண்டிருக்கிறது. பாலில் விழும்; திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும்’ என்று திமுக தலைவர் கருணாநிதி மார்ச் முதல் வாரத்தில் கூறியிருந்தார். அதுவரை தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த பாஜகவுக்கு, கருணாநிதி்யின் இந்த அறிவிப்பு, திமுக – தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டது என்பதைத்தான் சொல்கிறது என்று புரிந்தது. அதனால், பாஜக தமிழக தலைவர் தமிழிசை, ‘பழம் நழுவி பாலில் விழுந்தால் என்ன? காலில் விழுந்தால் என்ன? என்று எரிச்சலை வெளிப்படுத்தினார். ஆனால், நிலைமை மாறிப்போனது. கருணாநிதி அப்படி கூறிய சில நாட்களில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்தார். விஜயகாந்துடன் கூட்டணி குறித்து முதல் முதலில் பேசிய மக்கள் நலக்கூட்டணியினருக்கு இது மகிழ்ச்சி்யை தந்தது. திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஆகிவிட்டதால், தங்கள் கூட்டணிக்கு வரச்சொல்லி அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், தேமுதிகவைக் கூட்டணிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், தேமுதிக கூட்டணிக்கு வரும் என்று இன்னும் நம்புவதாக நேற்று முன் தினம் நடைபெற்ற மாவட்டச் செயலர்கள் கூட்டத்துக்குப் பிறகு கருணாநிதி கூறினார். ‘விஜயகாந்த் வருவார்; கருணாநிதி நம்பிக்கை’ என்று பத்திரிகைகள் எழுதின. ஆனால், கருணாநிதி கூறியதை பத்திரிகைகள் மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டதாக ஸ்டாலின் கூறினார். விஜயகாந்துக்கு புதிய அழைப்பு எதுவும் விடுக்கவில்லை. முன்பு விடுத்த அழைப்பு அப்படியேதான் இருக்கிறது என்று ஸ்டாலின் கூறினார். மேலும், தேமுதிகவுடன் அப்போதும் இப்போதும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். இது கருணாநிதி – ஸ்டாலின் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என்பதையே உணர்த்தியது.
இதற்கிடையில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் விஜயகாந்த் தங்கள் பக்கம்தான் வருவார் என்று நம்பிக்கையுடன் கூறிவந்தனர். மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் தேமுதிக தரப்பினருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். விஜயகாந்தும் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்றுமே தகவல் கசிந்தது. இதனால்தான்,
‘பழமும், பாலும் எங்களுக்கே’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் கூறினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று காலை 10 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் வருகை தந்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, சந்திரகுமார் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர், மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்தது என்று உறுதியாகியுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் , மக்கள் நலக் கூட்டணி கையெழிதிட்ட தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கீழ்வருமாறு:
DMDK_MNK_Agreement