mekedatu
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான பூமிபூஜைகள் கர்நாடகா அரசின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டுள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகள் மீதும் கடந்த 28-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருந்தது. ஆனால் கர்நாடகா அரசு இதை இழுத்தடிக்கும் வகையில் மனுத்தாக்கல் செய்ததால் ஜூலை 19-ந் தேதிக்கு இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக கன்னட இனவெறியர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை தூண்டிவிட்டு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு பூமிபூஜை போட வைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் கர்நாடகா அரசின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்ட இந்த தான்தோன்றித்தனமான செயலை மத்திய பாரதிய ஜனதா அரசு கண்டிக்கவும் இல்லை. இது தமிழக மக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்ட பின்னரும் கூட தமிழகத்துக்கான நியாயமான நீரை திறந்துவிட முடியாது என கர்நாடகா கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. இதை பற்றியும் மத்திய பாரதிய ஜனதா அரசு கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருக்கிறது.
தமிழகத்தை கெயில் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டங்கள் மூலம் பாலைவனமாக்கும் சதிகளை ஒவ்வொன்றாக அரங்கேற்றி வருகிறது மத்திய பாரதிய ஜனதா அரசு. இந்த நிலையில் தமிழகத்தின் 20 லட்சம் ஏக்கர் விளைநிலத்தை பாலைவனமாக்கவும் 25 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரத்தை சிதைக்கும் வகையிலும் காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணைகட்டுவதில் கர்நாடகா மும்முரமாக இருக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே பூமி பூஜை போடப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை பாஜக அரசு இன்னமும் அமைக்கவில்லை. தற்போது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் புதிய அணைக்கான பூஜை போடுவதையும் கண்டிக்காமல் மவுனம் ஒன்றையே பதிலாக வைத்திருக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.
காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதில் காங்கிரஸும் பாஜகவும் கைகோர்த்து கொண்டிருப்பதை தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இந்த துரோகத்துக்கும் வஞ்சகத்துக்கும் நிச்சயம் தமிழக மக்கள் தக்க பாடம்புகட்டத்தான் போகிறார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்கூட்டியே எச்சரிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.