பெங்களூரு:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இன்று உத்தர கன்னடா மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வதற்காக டில்லியில் இருந்து ஹூப்ளி நோக்கி சிறிய ரக தனியார் விமானத்தில் ராகுல்காந்தி பயணம் செய்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர் கவுசல் வித்யார்த்தி மற்றும் 3 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் 3ல் ஒரு பங்கு தூரத்தை விமானம் கடந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை சரி செய்ய விமானி முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. இறுதியில் ஹூப்ளியில் விமானத்தை தரையிறக்க முடியாமல் விமானி தவித்தார். இரு முறை தரையிறங்க முயற்சித்தபோது அது நடக்கவில்லை.

ஒரு புறமாக தரையில் சாய்ந்தவாறு சென்ற விமானம் இறுதியாக சுமார் 400 முதல் 500 மீட்டர் உயரத்தில் இருந்து தடையில்லாமல் தானாக விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து கர்நாடகா டிஜிபி மற்றும் ஐஜி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.