v
திண்டுக்கல்:
வைகோ பற்றி தவறான தகவலைய வாட்ஸ்அப் பில் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 17.02.2016 அன்று பழனி – உடுமலை ரோடு சண்முகநதி பாலம் அருகே கோவையில் இருந்து வந்த மினி லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வாலிபர்களும் உயிர் இழந்தனர்.  அப்போது அந்த சாலை வழியாக வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நடந்ததை அறிந்து தனது காரை நிறுத்தினார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் சொன்னார்.
ஆனால், வைகோ பயணி்த்த கார் மோதி இருவர் பலியானதாக வாட்ஸ்அப்பில் சிலர் தவறான தகவலை பரப்பினர். அது  பொய்யான தகவல் என்று வைகோ பிறகு விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில்,  ம.தி.மு.கவின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் என். செல்வராகவன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதில், பொய்யான தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட கால்துறை கண்காணிப்பாளரிடம்  செல்வராகவன் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:
“17.02.2016 அன்று பழனி – உடுமலை ரோடு சண்முகநதி பாலம் அருகே கோவையில் இருந்து வந்த மினி லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வாலிபர்களும் உயிர் இழந்தனர். விபத்து நடந்த இடத்தில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழனி தாலுகா போலிஸார் அவ்விடத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தார்கள்.
சம்பவம் நடந்த நேரத்தில் பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னுடைய காரில் சென்றபோது விபத்தைப் பற்றி அறிந்தார். உடனே காரை நிறுத்தி விசாரித்துவிட்டு வேதனை அடைந்து கண்ணீர் விட்டார். இந்தச் செய்தி 18.02.2016 அன்று வெளியான தினத்தந்தி, தினமலர் போன்ற பத்திரிகைகளில் இடம்பெற்றது. அந்த பத்திரிகை செய்தியின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்.
ஆனால் வாட்சப்-இல் சில விசமிகள்  வைகோ வின் கார் மோதி விபத்து ஏற்படுத்தியதாக அவருடைய நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறான செய்தியை விசமத்தனமாக பரப்பி வருகின்றார்கள். பொய்ப் பிரச்சாரம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பணிவுடன் வேண்டுகிறேன்”  என்று செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.