புதுடெல்லி: உலகக்கோப்பை போட்டிகள் துவங்க, இன்னும் 15க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்கள் ஓய்வு எடுத்து, மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாய் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; நெருக்கடியான ஐபிஎல் போட்டிகள் மே 12ம் தேதி முடிவடைந்த நிலையில், வீரர்கள் பலரும் மன இறுக்கத்தில் இருக்கக்கூடிய சூழலில், அவர்கள் தங்களின் நெருங்கிய உறவுகளிடம் இருந்து ரிலாக்ஸ் செய்துகொள்வதே, போட்டிக்குத் தயாராவதற்கு பேருதவியாக இருக்கும்.

ரோகித் ஷர்மா மற்றும் யஷ்வேந்திர சஹால் போன்றோர் சுற்றுலா தளங்களில் தங்கள் குடும்பத்தினருடன் பொழுதுபோக்கி வருகின்றனர் என்ற தகவல்கள் வெளிவருகின்றன.

வரும் மே மாதம் 22ம் தேதி இந்தியாவிலிருந்து லண்டனுக்கு பறக்கவுள்ளனர் இந்திய அணியினர். இதன்பொருட்டு, அணியினர் அனைவரும் மே 21ம் தேதி மும்பையில் கூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, இந்த குறுகிய காலகட்டத்திற்குள், நன்றாக ஓய்வெடுத்து மனதை ரிலாக்ஸ் செய்து, உலகக்கோப்பையை எதிர்கொள்ள முழு அளவில் தயாராகும்படி வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக, தேர்வு கமிட்டி வட்டாரங்கள் கூறுகின்றன.