லண்டன்: பிரிட்டனில் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆகிய பணிகளுக்காக பொது விசா பெறுவதற்கு விண்ணப்பம் செய்வோர், இனிமேல் தனியான ஆங்கில மொழி தேர்ச்சி தேர்வை எழுத வேண்டியதில்லை என்று பிரிட்டன் உள்துறை அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர், ஒற்றை தொழில்சார் ஆங்கில தேர்வை(ஓஇடி) மட்டும் எழுதினால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஒன்றை தொழில்சார் ஆங்கில தேர்வு என்பது ஒரு சர்வதேச ஆங்கில மொழி தேர்வாகும். இத்தேர்வின் மூலமாக, ஆங்கில மொழி பேசப்படும் நாடுகளில் மருத்துவ சார்ந்த பணிகளை மேற்கொள்ள விரும்புவோரின் ஆங்கில அறிவு சோதிக்கப்படுகிறது.

பிரிட்டன் உள்துறை அலுவலகத்தின் இந்த அறிவிப்பு, இந்தியாவில், குறிப்பாக கேரளாவில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில், இம்மாநிலத்திலிருந்து பிரிட்டனுக்கு மருத்துவம் சார்ந்த செவிலியர் மற்றும் மருத்துவச்சி சார்ந்த பணிகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.