பல்வேறு மாகாணங்களாக பிரிந்து கிடந்த இந்தியத் துணைக்கண்டம், மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கபட்டு இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகின்றன. மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு (Tamil Nadu) இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது.  இதன் தலைநகராக சென்னை உள்ளது.
தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென் முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும், வடக்கிலும், கேரளா,  கர்நாடகம்  மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன.
புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது.
புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.
தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன.
 சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
1tamilnadu_map_intamil
தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11வதாகவும் மக்கள்தொகை யில் ஏழாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் நான்காவதாகவும் (2010ல்) உள்ளது. 2006ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது. மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும்  விளங்குகிறது.
கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.
பாரம்பரியத்தின்படி தமிழ் மொழியானது சிவ பெருமானால் அகத்தியருக்கு கற்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.
தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
சங்ககாலம் தொட்டே சேர சோழ பாண்டிய நாடு என பல்வேறு பகுதிகளாக தமிழகம் பல கூறுகளாக பிரிந்தே இருந்து வந்திருக்கிறது.
1920 ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ‌தான் தமிழ்நாடு காங்கிரஸ் என்பதைப் போல மாநில வாரியாக காங்கிரஸ் கமிட்டிகள் பிரிக்கப்பட்டது. நாடு விடுதலையான உடனே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் உத்திரவாதம், கிடப்பில் போடப்பட்டதால் போராட்டங்கள் வெடித்தது. அதன் விளைவாக 1956 ம் ஆண்டு இதே நாளில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.
பல்வேறு மொழி பேசும் மக்கள் வெவ்வேறு மாநிலங்ளில் இருந்ததால் வளர்ச்சி பாதிக்‌கப்பட்டது. இதனால் கட்சி பாகுபாடின்றி அன்றைய காலகட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தில் தமிழகம் சில பகுதிகளை இழந்தும், சில பகுதிகளை பெற்றும் இருக்கிறது.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளை கேரள, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் கொண்டாடி வரும் நிலையில், தமிழக அரசும் கொண்டாடினால் அதற்காக போராடிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதாக அமையும் என்பது தமிழ் உணர்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
1chennai-old-mount-road-anna-salai
இதனிடையே தமிழ்நாடு தனி மாநிலமாக உருவாகி இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி
தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிவழி மாநிலம் அமைய, பெரியார், அண்ணா, காமராஜர், ஜீவா, சிலம்புச் செல்வர், சங்கரலிங்கனார், நேசமணி போன்ற தலைவர்கள் பெரும் பாடுபட்டவர்கள் என தெரிவித்துள்ளார். மொழிவழி மாநிலங்கள் பிரிந்த பிறகு, 1967ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி, தமிழ்நாடு என பெயர் சூட்டும் தீர்மானத்தை பேரவையில் அண்ணா முன்மொழிய, ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.
வைகோ
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956–ம் ஆண்டு, மொழிவழி மாநில பிரிவிணையின்போது இன்றைய வரைபடம் கொண்ட தமிழ்நாடு அமைந்தது. சங்ககால தமிழகத்தின் பல பகுதிகளை நாம் இழந்து விட்டோம். தமிழக நிலப்பகுதிகளை காப்பதற்காக தமிழரசுக் கழக தலைவர் ம.பொ.சி. வட எல்லையில் களம் அமைத்தார். தெற்கு குமரி மாவட்டத்தின் பகுதிகளை காக்க மார்சல் நேசமணி, குஞ்சன் நாடார், பி.எஸ்.மணி, தினமலர் ராமசுப்பு ஐயர் உள்ளிட்டோர் போராடினார்கள்.
குமரி மாவட்டத்தில் தமிழர் பகுதிகளை மீட்பதற்காக நடந்த போராட்டக் களத்தில், 18 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார். தமிழர் பகுதிகளைப் பாதுகாத்து, தமிழ்நாடு என்று அமைக்க உயிர் நீத்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, போராடிய தலைவர்களை போற்றுவோம் என்றும் வைகோ கூறியுள்ளார்.
ராமதாஸ்
மொழி அடிப்படையில் மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து, இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் 14 மாநிலங்களாகவும், 6 ஒன்றிய பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டன. தமிழகத்தின் நிலப்பகுதியை பாதுகாப்பதற்காக போராடிய தலைவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நாம் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் எதற்காக போராடினார்களோ, அதை சாதிக்க நாம் பாடுபட வேண்டும். தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், தமிழகத்தின் வரலாற்றை இளைய தலைமுறை அறிந்துகொள்ளவும் வசதியாக நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு நாளாக அரசு கொண்டாட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறி உள்ளார்.
திருநாவுக்கரசர் 
மொழிவழி மாநிலங்களுக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர்களை இந்நாளில் போற்ற வேண்டும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன்
மொழிவழி மாநிலமாக பிரிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவுபெறும் தருவாயில், இந்தியாவில் தமிழை ஆட்சி மொழியாக ஆக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டுமென்றும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈ.ஆர்.ஈஸ்வரன்
இன்று தமிழ்நாடு தினம். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினம். தமிழர்களுக்கு என்று தனி மாநிலம் உருவான தினம். சாதி, மத, அரசியல், பொருளாதார ஏற்பாடுகளை மறந்து தமிழர்களாக ஒற்றுமைப்பட வேண்டிய தினம். இந்த தமிழ்நாடு தினத்தில் தமிழனாக ஒற்றுமைப்படுகின்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம். தமிழகத்தின் முன்னேற்றம் கேள்விக்குறியானால் சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை துறப்போம். தமிழர்களாக ஒற்றுமைப்பட்டு வெற்றி காண்போம் என்று கூறியுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.