மாரண்டஹள்ளி அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரியதோரணபெட்டம் பகுதியை அடுத்து சீடிபெட்டம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் தீபா. 15 வயதுடைய தீபா, மாரண்டஹள்ளி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23ம் தேதி பள்ளிக்கு சென்ற அவர் திரும்பவில்லை. அன்று முதல் அவரை பெற்றோர்கள் தேடி வந்தாலும், காவல்துறைக்கு தகவல் அளிக்காமல், தனிப்பட்ட முறையில் தேடுதல் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது தீபா கிடைக்காத காரணத்தால், மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் சேகர் புகார் அளித்துள்ளார். இப்புகாரை பதிவு செய்துக்கொண்ட மாரண்டஹள்ளி போலீசார், தீபாவை அவரது தோழிகள் வீடுகளிலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இதர நண்பர்கள் வீடுகளிலும் தேடி வருகின்றனர்.

அத்தோடு, தீபா யாரையேனும் காதலிக்கிறாரா ? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.