தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கொரோனா தொற்று பரவ காரணமாக வியாபார சந்தைகள் கண்டறியப்பட்டதால், சென்னை கோயம்பேடு மார்க்கெட் உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் லட்சக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரம், இழந்துள்ள வணிகர்கள் மீண்டும் வணிகத்தை தொடங்கும் வகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட் உள்பட பிற மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள மார்க்கெட்டுகளையும் திறக்க வலியுறுத்தி ஆகஸ்டு 10ந்தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்போவதாக தமிழ்நாடு வணிகர்களின் பேரமைப்பு சார்பில், அதன் தலைவர் விக்கிரமராஜா அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தவர், வரும் 10ந்தேதி நடக்க இருந்த மார்க்கெட் மூடல், கடையடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க ஏற்பாடு செய்வதாக தமிழக அரசு உறுதியளித்து இருப்பதால், போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி வர இருப்பதாலும் வியாபாரிகளின் நலன் கருதி போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக விக்கிரமராஜாவின் போராட்டத்துக்கு கோயம்பேடு பூ, மலர் வியாபாரிகள் சங்கம் உள்பட சில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.