மதுரை: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழக அரசு, ஆட்சியின் கடைசி நேரத்தில்,  வன்னியர்களுக்கு 10.5%  உள் ஒதுக்கீடு வழங்கி, தமிழக சட்டமன்றப் பேரவையில் மசோதா தாக்கல் செய்து, அதை நிறைவேற்றியதுடன், அன்றே கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு, அனுமதி பெற்று அரசாணையும் வெளியிட்டது.

ஒரு ஜாதியிருக்கும் மட்டும்  உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது, முறையற்ற செயல் என்றும், அதிமுக பாமக கூட்டணிக்காகவே, தமிழகஅரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.  இந்த ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து  பல்வேறு சாதி அமைப்புகளும் போர்க்கொடி தூக்கி உள்ளன. இந்த நிலையில், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உத்தமபாளையத்தைச் சேர்ந்த சின்னான்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், குடும்பகவுண்டர் சமூகத்தை சார்ந்த 30 லட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள இந்த சமூகம் கல்வி, சமூக பொருளாதர ரீதியாகவும் பின் தங்கியுள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த 20% இட ஒதுக்கீட்டை 108 சமூகத்தினர் பங்கீட்டு கொள்வதால் குடும்பகவுண்டர் சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதிதத்துவம் கிடைக்கவில்லை.

இதேபோல மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிற சமூகத்தினர் பாதிக்கப்பட்டதால் இதனை கருத்தில் கொண்டு கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் சாதி ரீதியாக கணக்கெடுப்பு எடுக்க ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் முறையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்காரணமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த சமூகத்தில் உள்ள 22 சாதியினருக்கு வெறும் 2.5% இட ஒதுக்கீடு கிடைக்கும்.

எனவே சாதிவாரி கணக்கீடு குறித்த முடிவுகள் வெளிவரும் வரை உள்ஒதுக்கீடு சட்டத்தை நிறுத்திவைக்க  வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில்,  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.