சிதம்பரம்:

புகழ்மிக்க சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் 10நாட்கள்  திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவை யொட்டி, நாளை (ஜனவரி 1ந்தேதி) கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து திருவிழாக்கள் ஆரம்பமாகின்றன.

பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோயில். கடலூர் மாவட்டத்தில் உள்ள  இந்த ஸ்தலம் உலகப்புகழ் பெற்றது. இங்கு ஆண்டு தோறும்,  மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு மார்கழி மாதத்துக்கான மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (புத்தாண்டு) காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. நாளை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கோயில் உத்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர்  நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து, தினமும் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 9ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம், அதிகாலை நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு நான்கு மாட வீதிகளையும் வலம் வரும்.

அன்று இரவு தேர் நிலைக்கு வந்தவுடன் நடராஜர் சிவகாமசுந்தரி சமேதம் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைபெறும்.

இறுதி நாளான ஜனவரி 10ம் தேதி அதிகாலையில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு ராஜசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறும். பின்னர் பல்வேறு அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது.

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக மதியம் 2 மணியளவில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பர்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் திருளுவார்கள். இதையொட்டி ஏராளமான காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.