மாநாட்டுக்கு வந்த மலேஷியர்கள்..   தப்பிய போது மடக்கிய  அதிகாரிகள்..


டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளால், கொரோனா வைரஸ் பரவல் விசுவரூபம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டினர் பலர், தங்களைச் சோதனைக்கு ஆட்படுத்திக்கொள்ளாமல்  தலைமறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் 10 மலேஷியர்கள், நேற்று சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேரும் கடந்த 12 ஆம் தேதி மதுரை வந்துள்ளனர்.

இத்தனை நாட்களாகத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த அவர்கள் நேற்று மலேஷியா தப்ப முயன்றனர்.

சென்னையில் தவிக்கும் மலேஷிய பிரஜைகளை ஏற்றிச்செல்வதற்காகச் சென்னை விமான நிலையத்தில் மலேஷியாவின் ‘பதிக் ஏர் ஸ்பெஷல் பிளைட்’ காத்திருந்தது.

அந்த விமானத்தில் ஏறி, மலேஷியாவுக்கு தப்ப முயன்றபோது, அவர்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டனர்.

விமான நிலைய அதிகாரிகள் விசாரித்தபோது, அவர்கள் சரியாகப் பதில் சொல்ல வில்லை.

டெல்லி மாநாட்டுக்கு வந்த தகவலையும் மறைத்தனர்.

பின்னர் போலீசில் 10 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்