சென்னை:

தூத்துக்குடியில் மக்கள் 100 நாட்களாக போராடி வந்தபோது,  காவல்துறை, உளவுத்துறை, க்யூ பிராஞ் இதெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தது? டிடிவி தினகரன் காட்டமாக கேள்வி விடுத்தார்.

தமிழக சட்டமன்ற நிகழ்ச்சிகள் இன்று 2வது நாளாக எதிர்க்கட்சி இன்றி நடைபெற்றது.  பேரவையில் கல்ந்து கொள்ள வந்த டிடிவி தினகரன் சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

ரஜினி காவல்துறையை ஆதரித்து தூத்துக்குடியில் பேசியிருக்கிறார். காவல்துறைமீது கைவைப்பவர்கள் மீது கடுமையாக தண்டிக்க வேண்டும் என கூறியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். உண்மை தெரியாமல் ரஜினி பேசியிருக்கிறார் என்றும் கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்   இருபத்தைந்து டெட்பாடி ஏத்துனதா சொன்னாங்க இனிமேதான் போலீஸ்காரர்களின் மகிமை தெரியும் என்றவர், காவல்துறையை நாங்களும்தான் மதிக்கிறோம். காவல்துறை ஏவல் துறையா செயல்பட்டா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பியவர்,  போலீசை பத்தி சினிமா டயலாக் போல ரஜினி பேசியிருக்கிறார் என்று சாடினார்.

கருப்பு ஆடுகள் எல்லாத் துறையிலும் உண்டு அதற்கு காவல்துறையும் விதி விலக்கு அல்ல என்ற டிடிவி,  திருவிழா என்று கூடினால் பிக்பாக்கெட் வரத்தான் செய்வான், போராட்டம்னு  மக்கள் திடீர் என்றா கூடினாங்க 100 நாளாக நடத்தி வருகிறார்கள்… அப்போது  காவல்துறை, உளவுத்துறை, க்யூ பிரான்ஞ் இதெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தது..?

இறந்தவர்கள் எல்லாம் அப்பாவி பொதுமக்கள்தான். மணிராஜ் திருமணமாகி மூன்று மாதமே ஆனவர்,  பதினேழு வயது ஆனவரைத்தான் இந்த காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. போராடியவர்களில் எவரும்,  போராட்டத்திற்கு கட்சி கொடி தூக்கியோ அல்லது கட்சிகளின் பெயர் கொண்டோ வர  மக்கள் அனுமதிக்கவில்லை என்றும், நான் பார்த்தது தூத்துக்குடியில் இதைத்தான் என்று கூறினார்.