100 நாள்கள்; 100 காய்கறிகள்  : ஆகாஷ் முரளிதரனின் அரிய முயற்சி

நம் தமிழக பாரம்பரிய காய்கறிகளை அனைவருக்கும் நினைவுபடுத்தவும், தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் ஒரு முயற்சியை மேற்கொண்ட ஆகாஷ் முரளிதரன், மார்ச் மாதம் தொடங்கி, ஜூன் மாதம் வரை மொத்தம் 100 நாள்கள்; 100 காய்கறிகள் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

 “ஆர்கிடெக்சர் படித்திருந்தாலும், சின்ன வயசில் இருந்தே எனக்கு சமையல் கலையில் ஆர்வம் அதிகம். அப்போ தான் இத்தாலில `மாஸ்டர் செஃப் ஃபுட் டிசைனிங்’ படிக்க போனேன். படிப்பு முடிஞ்சு கடந்த ஜனவரிலசென்னைக்கு வந்தேன்.

ஒருநாள் வீட்டைச் சுத்தம் செய்தபோது மீனாட்சி அம்மாள் 1951-ல் எழுதிய `சமைத்துப்பார்’ புத்தகம் கண்ணுல பட்டுச்சு. அதை படிக்கும் போது பாரம்பரிய காய்கறிகளை பற்றி இந்த லாக்டவுன் டைம்ல தினமும் எழுதலாமேனு தோணிச்சு.  இவை எல்லாமே நம்ம கிராமங்களில் எளிதாக கிடைக்கும் காய்கறிகள் தான்.  இவைகள் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வீட்டுல இருந்தே என்ன செய்யலாம்ன்னு யோசிச்சேன். லாக்டௌன் ஆரம்பமானதுல இருந்து எல்லாரும் சோஷியல் மீடியாவுல ஆக்ட்டிவா இருந்தாங்க.

பாரம்பரிய காய்கறிகள்

அதனால, `சமைத்துப்பார்’ புத்தகத்துல குறிப்பிடப்பட்டிருந்த காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்து என் இன்ஸ்டா பக்கத்துல பதிவிடத் தொடங்கினேன். ஆரம்பத்துல எளிதில் கிடைக்கக்கூடிய 25 காய்களைக் கொண்டுதான் இந்த டாஸ்க்கை ஆரம்பிச்சேன். தினமும் ஒரு காயை எடுத்துக்கிட்டேன். மொதல்ல அந்தக் காயைப் பற்றிய விளக்கம், பிறகு அந்தக் காயை வைத்து எளிதில் சமைக்கக்கூடிய ஏதாவது ஒரு டிஷ்ன்னு டாஸ்க் ஆரம்பிச்சது. அந்தக் காய்கறிகளை வைத்து நானே சமையல் செய்து அதை வீடியோவாக எடுத்தும் இன்ஸ்டாவுல போஸ்ட் பண்ணினேன்.

இந்த போஸ்ட் எல்லாத்தையும் பார்த்த நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் எனக்கு போன் பண்ணி நம்ம பாரம்பர்ய காய்கறிகள் பற்றியும், அவற்றைச் சமைக்கிற விதத்தைப் பற்றியும் கேட்கத் தொடங்கினாங்க. சிலர் தங்களுக்குத் தெரிஞ்ச காய்கறிகளோட பெயர்களைச் சொல்லி அவற்றைப் பற்றியும் எழுதச் சொன்னாங்க.

இன்னும் சிலர் தங்களோட வீட்டுல விளையுற காய்கறிகளை எடுத்துக்கொண்டு வந்தும் கொடுத்தாங்க. இப்படியே அவரைக்காய் வகைகள், கிழங்கு வகைகள், சுண்டைக்காய், வேப்பம்பூ, முருங்கைப்பூ, பிரண்டை, நெல்லிக்காய், மணித்தக்காளி, பீர்க்கங்காய், பரங்கிக்காய், சுரைக்காய், கற்றாழை, வெற்றிலை, கொய்யா இலை, கோவைக்காய், வாழைப்பூனு 100 காய்கறிகள் கிடைச்சது. மார்ச் மாதம் தொடங்குன என்னோட டாஸ்க் ஜூன் மாதம் நிறைவடைந்தது.

நிறைய பேர் இன்ஸ்டா போஸ்ட் எல்லாம் பாத்துட்டு இந்தக் காய்கறிகள் எல்லாம் மார்க்கெட்டுகள்ல கிடைக்கிறது இல்லைன்னு சொன்னாங்க. சென்னையில் உள்ள மார்க்கெட்களிலேயே இவையெல்லாம் கிடைக்குது. நாம தேடுறது இல்லைங்குறதுதான் நிஜம்.

மார்க்கெட்டுக்கு போனாலே தக்காளி, வெங்காயம், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர்னு குறிப்பிட்ட காய்கறிகளை மட்டும்தான் வாங்கிட்டு வர்றோம். அவற்றைத்தான் மாற்றி மாற்றி சமைச்சும் சாப்பிடுறோம். நாம நினைச்சா வருஷம் 365 நாள்களுக்கு 365 புது காய்கறிகளைச் சமையலுக்குப் பயன்படுத்த முடியும். அவ்ளோ காய்கறிகள் இருக்கு நம்ம நாட்டுல. நாமதான் தேடி வாங்கணும். இந்தக் காய்கறிகள் மூலமாகக் கிடைக்கிற சத்துகள் ஏராளம். குழந்தைகளையும் இந்தக் காய்கறிகளைச் சாப்பிடப் பழக்கணும்.

மணித்தக்காளி, பீர்க்கங்காய், சுண்டைக்காய், வேப்பம்பூ, முருங்கைப்பூ, பிரண்டை எல்லாம் பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தப்படுறதே இல்ல. யாருமே விரும்பி வாங்குறதே இல்லைங்குற காரணத்தால இவற்றைச் சாகுபடி செய்யுறதும் குறைஞ்சிட்டு வருது. இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால் ஒரு கட்டத்துல இந்தக் காய்கறிகள் எல்லாம் அழிஞ்சே போய்டும். அதனால நம்ம பாரம்பரிய காய்கறிகள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். கொரோனா பிரச்னை, லாக்டௌன் எல்லாம் முடிஞ்சு, ஓரளவு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகு இந்த பாரம்பர்ய காய்கறிகள் பற்றிய விழிப்புணர்வைத் தமிழக மக்கள் அனைவரிடமும் பெரிய அளவில் எடுத்துச்செல்ல முயல்வேன்” என்று அழகாக விவரிக்கிறார் ஆகாஷ் முரளிதரன்.

– லெட்சுமி பிரியா