புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டிற்குள் நாட்டில் ஓடும் அனைத்து ரயில்களும் முழுவதுமாக மின்மயமாக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.

பிரேசில் அதிபர் இந்தியா வந்துள்ளதையடுத்து, இந்தியா – பிரேசில் தொழில்துறை கூட்டம் நடைபெற்றது. இதில் வர்த்தகப் பொறுப்பையும் சேர்த்து வகிக்கும் பியூஷ் கோயல் பேசினார்.

“வரும் 2024ம் ஆண்டிற்குள் அனைத்து ரயில்களையும் மின்மயமாக்க திட்டமிட்டுள்ளோம். அப்படியான நடவடிக்கை பூர்த்தியடைந்தால், உலகிலேயே 100% மின்சாரத்தில் இயங்கும் ரயில்வே துறை இந்தியாவினுடையதாக இருக்கும்.

அதேசமயம், வரும் 2030ம் ஆண்டில், முழு ரயில்வே நெட்வொர்க்கையும் முற்றிலும் உமிழ்வற்ற வலையமைப்பாக மாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளோம். அது தூய்மை சக்தியாக இயங்கும்” என்று பேசினார்.