கடலூர்:
கோயம்பேட்டிலிருந்து வந்த  தொழிலாளர்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  160 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு கொரோனா ஹாட்ஸ்பாட்டாக இருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து,  கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து அங்கு தொழிலில் ஈடுபட்டிருந்த அண்டை மாவட்டங்களைச் சோர்ந்த  ஏராளமானோர் அவரவர் சொந்த ஊருக்கு லாரிகள் மூலமும், இலகுரக வாகனங்கள் மூலமும் திரும்பினர். அவ்வாறு திரும்பியவர்களில்  பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து கடலூர் மாவட்டம் திரும்பியவர்கள்பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  கடலூர் திரும்பிய சுமார் 550 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களை மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.
அந்தப் பரிசோதனையின் முடிவில் ஒரே நாளில் 107 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயம்பேட்டிலிருந்து திரும்பியவர்களில் 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 430 பேரின் பரிசோதனை முடிவு நாளை வெளியாகும் எனத் தெரிகிறது.
மாவட்டத்தில் இதுவரை 4,931 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 160 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 26 பேர்.
இதுவரை 699 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப் படுத்தப்பட்ட 699 பேரும் கோயம்பேடு மார்க்கெட் உடன் தொடர்புடையவர்கள் என்றும் கடலூரில் கிராமங்கள் தோறும் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.