சென்னை:
10-ம் வகுப்பு தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின்  ஆசிரியர்கள் 21ந்தேதி பள்ளிக்கு வரத்தேவையில்லை என்று பள்ளிக்கல்வி அறிவித்து உள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தரவை வாபஸ் பெறப்படுவதாக கூறியுள்ளது.
கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய  இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ்  பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என ஏற்கனவே  திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி எதுவும் நடத்த முடியாமல் போனது.
இதைத்தொடர்ந்து   10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கும். ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ் 1 தேர்வு ஜூன் 2ம் தேதி நடத்தப்படும். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 27ம் தேதி தொடங்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஊரடங்கு உத்தரவும் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத்தேர்வுகளையும் தள்ளி வைக்க வேண்டும் அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றப்படுவதாகவும், ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்  என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  11-ம் வகுப்பு தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு மறு தேர்வு ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
தற்போது  தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தவிட்டுள்ளது.
பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வரும் 26-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால், முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.